வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கி ஏமாற்றிய தொழில் அதிபர் கைது; தந்தையும் சிக்கினார்..!


திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் சிக்கினார். கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது தந்தையையும் போலீசார் கைது செய்தனர்.

லிதுவேனியா நாட்டை சேர்ந்த 22 வயது நிரம்பிய மாணவி, சென்னை ஆயிரம்விளக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

துபாயில் தங்கியிருந்து மேல்படிப்பு படித்து வந்தபோது, சென்னை அமைந்தகரையை சேர்ந்த ரெயில்வே காலனியை சேர்ந்த தொழில் அதிபர் ருமையாஸ் அகமது என்னை சந்தித்தார். என்னை காதலிப்பதாக கூறிய அவர் திருமணம் செய்துகொள்வதாக தெரிவித்ததால் இருவரும் உல்லாசமாக இருந்தோம்.

இதனால் நான் கர்ப்பமானேன். திருமணம் செய்துகொள்வதாக சென்னைக்கு அழைத்து வந்த அவர் ஒரு நட்சத்திர ஓட்டலில் என்னை தங்கவைத்தார்.

அவரும், அவரது குடும்பத்தினரும் வற்புறுத்தியதால் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த மார்ச் மாதம் எனது வயிற்றில் வளர்ந்த கருவை கலைத்தேன். அதன்பிறகும் அவர் பல்வேறு இடங்களுக்கு என்னை அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்தார். இதனால் மீண்டும் கர்ப்பமாக உள்ளேன்.

தொழில் அதிபர் ருமையாஸ் அகமது என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். அவரது குடும்பத்தினர் கொலைமிரட்டல் விடுக்கிறார்கள். எனவே தலைமறைவாக உள்ள தொழில் அதிபர் ருமையாஸ் அகமது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனு மீது ஆயிரம் விளக்கு போலீசார் 3 சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தலைமறைவாக இருந்த தொழில் அதிபர் ருமையாஸ் அகமதுவை தேடி வந்தனர். மேலும் அந்த மாணவிக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.

இந்தநிலையில் வெளிநாட்டு மாணவியை தவிக்கவிட்டு தலைமறைவான தொழில் அதிபர் ருமையாஸ் அகமது நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரது தந்தை அப்துல் கரீம் (65) என்பவரையும் போலீசார் பிடித்து கைது செய்தனர். வெளிநாட்டு மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். கைதான ருமையாஸ் அகமது இறால் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!