திருச்சியில் குடிபோதையில் தலையணையால் முகத்தை அமுக்கி தாயை கொலை செய்த என்ஜினீயரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருச்சி ராம்ஜிநகர் மில்காலனியை சேர்ந்தவர் ஹரிதாஸ். இவருடைய மனைவி சாந்தி (வயது 52). இவர்களுக்கு மனோன்மணி (29) என்ற மகளும், குமரவேல் (28) என்ற மகனும் உள்ளனர். குமரவேலுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் வீட்டின் மாடியில் மனைவியுடன் வசித்து வருகிறார். ஹரிதாஸும், சாந்தியும் கீழ் தளத்தில் வசித்து வருகிறார்கள்.
குமரவேல் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு, திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதமாக அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
பணம் கேட்டு தகராறு
மேலும், குடிப்பழக்கத்துக்கு ஆளான அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து வீட்டில் பணம் கேட்டு தகராறு செய்தும் வந்துள்ளார். கடந்த 20-ந் தேதி சாந்தி குளிக்க சென்றபோது, குமரவேல் அவரது கழுத்தில் துண்டை சுற்றி நெரித்து கொலைசெய்து விடுவேன் என மிரட்டி பணம் கேட்டுள்ளார். அப்போது அவரிடம் இருந்து சாந்தியை வீட்டார் காப்பாற்றி உள்ளனர்.
இந்தநிலையில் சிலதினங்களுக்கு முன்பு ஹரிதாஸ் கண் அறுவை சிகிச்சைக்காக புதுச்சேரி சென்று விட்டார். நேற்று முன்தினம் காலை குமரவேலின் மனைவி யோகதீபா தனது தாய் வீட்டுக்கு குழந்தையை தூக்கி கொண்டு சென்று விட்டார். வீட்டில் குமரவேலும், அவரது தாய் சாந்தியும் மட்டும் இருந்துள்ளனர். சிறிதுநேரத்தில் குமரவேல் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
மாடி அறையில் பிணம்
நேற்று முன்தினம் பகல் குமரவேலின் சகோதரி மனோன்மணி தனது தாய் சாந்தியை பார்க்க வீட்டுக்கு வந்தார். ஆனால் வீடு பூட்டிக் கிடந்ததால் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தார். ஆனால் அவர் எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை.
குமரவேலிடம் விசாரித்தபோது, அவர் மார்க்கெட்டுக்கு செல்வதாக கூறி சென்றதாக தெரிவித்தார். இதையடுத்து உறவினர்கள் சாந்தியை அக்கம்பக்கத்தில் தேடினார்கள். அவர்களோடு சேர்ந்து குமரவேலும் சாந்தியை தேடினார். இரவு வரை சாந்தி வீடு திரும்பாததால் மனோன்மணிக்கு சந்தேகம் ஏற்பட்டது. வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்று உறவினர்களிடம் கூறினார். இதையடுத்து உறவினர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மாடியில் உள்ள அறையில் சாந்தி பிணமாக கிடந்தார்.
தலைமறைவு
அவரது உடலை கண்ட மனோன்மணி அதிர்ச்சி அடைந்து கண்ணீர்விட்டு கதறி அழுதார். உடனே தனது தம்பி குமரவேலை தேடினார். ஆனால் அவர் அங்கிருந்து நைசாக தப்பிச் சென்று தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து அந்த பகுதியினர் எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் குமரவேல் குடிபோதையில் தனது தாய் சாந்தி முகத்தை தலையணையால் அமுக்கி கொலை செய்து இருக்கலாம் என தெரியவந்தது.
மேலும் சாந்தியின் தலையில் 2 இடங்களில் காயமும் இருந்துள்ளது. அவரை பிடித்து கீழே தள்ளியதில் தலையில் காயம் ஏற்பட்டு இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து எடலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி சென்ற குமரவேலை தேடி வருகிறார்கள்.-Source: dailythanthi
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!