தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக ரூபா குருநாத் ஒருமனதாக தேர்வு..!


தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக ரூபா குருநாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உட்பட்ட மாநில கிரிக்கெட் சங்கங்களில் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பி.சி.சி.ஐ.) வினோத் ராய் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு நிர்வகித்து வருகிறது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த நிர்வாக குழு பி.சி.சி.ஐ.யை நடத்தி வருகிறது.

லோதா கமி‌ஷன் பரிந்துரைப்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு மற்றும் மாநில சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் அக்டோபர் 23-ந்தேதி நடக்கிறது. அதற்கு முன்னதாக அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களும் நிர்வாகிகள் தேர்தலை நடத்த அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதில் பெரும்பாலான கிரிக்கெட் சங்கங்கள் தேர்தலை நடத்தி முடித்து விட்டன.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தை இன்று நடத்தியது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் இதற்கான கூட்டம் நடந்தது. புதிய நிர்வாகிகள் அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக ரூபா குருநாத் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். இவர் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவர் என்.சீனிவாசனின் மகள் ஆவார். ரூபா குருநாத் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உட்பட்ட மாநில கிரிக்கெட் சங்கங்களில் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பெற்றார்.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன முழு நேர இயக்குனரான ரூபா குருநாத் சென்னையில் உள்ள கிராண்ட்ஸ்லாம் கிரிக்கெட் கிளப்பின் செயலாளராகவும் உள்ளார்.

டி.ஜெ.சீனிவாசராஜ் (நகரம்), டாக்டர் பி.அசோக் சிகாமணி (மாவட்டம்) ஆகியோர் துணை தலைவர்களாகவும், ஆர்.எஸ். ராமசாமி செயலாளராகவும், கே.ஏ.சங்கர் இணை செயலாளர் பதவிக்கும், என்.வெங்கடராமன் உதவி செயலாளராகவும் ஜெ.பார்த்தசாரதி பொருளாளராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

வி.கருணாகரன், பி.எஸ்.அரவிந்த், எம்.கே.ஸ்ரீவத்சா, என்.விஜய் நிர்மல்குமார், எஸ்.பிரபு, அஜய்குமார் சந்தோக் (6 பேரும் நகரம்), சண்முகம் கவுதமன், கே.எஸ். சீனிவாசன், ஆர்.திவ்யபிரகாசம் (மூவரும் மாவட்டம்) ஆகியோர் செயற்குழு உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!