சட்டுபுட்டுன்னு சுட்டுட்டு தப்பிச்சோமான்னு இல்லாமல்.. சாவகாசமாக ஊஞ்சல் ஆடிய திருடன்!


விழுப்புரத்தில் திருட சென்ற வீட்டில் ஊஞ்சலில் அமர்ந்து கொள்ளையன் ஆனந்தமாக ஆடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் சுதாகர் நகர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

புதிய பஸ் நிலையம் மற்றும் சுதாகர் நகர் பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. அதுபோல் வீட்டு முன்பு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடப்பட்டு வந்தது. தொடர்ந்து திருட்டு சம்பவம் மற்றும் பெட்ரோல் திருட்டால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதை அறிந்த ஆசிரியர் இளங்கோ குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதையொட்டி அவர் தனது வீட்டை சுற்றிலும் 6 இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தியிருந்தார்.

ஆசிரியர் இளங்கோ தனது வீட்டில் குடும்பத்துடன் நேற்று இரவு தூங்கினார். நள்ளிரவு அங்கு வந்த டிப்-டாப் உடை அணிந்த வாலிபர் ஒருவர் ஆசிரியர் இளங்கோ வீட்டுக்கு திருட வந்தான்.

வீட்டின் 2-வது மாடிக்கு சென்றான். அங்கு ஊஞ்சல் கட்டப்பட்டிருந்தது. இதை பார்த்த அந்த வாலிபனுக்கு ஊஞ்சலில் ஆட ஆசை ஏற்பட்டது. உடனே அவன் திருடசென்றதை மறந்து ஆனந்தமாக ஊஞ்சலில் அமர்ந்து ஆடினான். பின்பு அவன் மாடியில் இருந்து கீழே இறங்கி சென்றான். அங்கு நின்ற இரு சக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடிவிட்டு சென்று விட்டான்.

இன்று காலை ஆசிரியர் இளங்கோ தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தார். அப்போது டிப்-டாப் வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடிசெல்வதும். அந்த வாலிபர் தனது வீட்டின் மாடியில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து ஆனந்தமாக ஆடுவதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் விழுப்புரம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை கொண்டு டிப்-டாப் வாலிபரை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

திருட சென்ற வீட்டில் ஊஞ்சலில் அமர்ந்து கொள்ளையன் ஆனந்தமாக ஆடிய சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!