ரெயில்வே ஊழியர் கொடூரமாக கொலை; தங்க மோதிரத்துக்காக ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்


ராமநாதபுரம் அருகே உள்ள எல்.கருங்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்துராக்கு(வயது 61). ரெயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நேற்று முன்தினம் ராமநாதபுரம் அருகே உள்ள கண்ணந்தை கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். அங்கு நாடகம் பார்த்துவிட்டு, மனைவியின் தங்கை வீட்டிற்கு சென்றார்.

அங்கு சூரங்கோட்டை வலம்புரி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவரான மதன்குமார்(29) என்பவருடன் சேர்ந்து இரவில் மது அருந்தியுள்ளார். மதுபோதையில் இருந்தபோது முத்துராக்குவிடம் மதன்குமார் பணம் கேட்டுள்ளார். அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் போதை அதிகமான நிலையில் முத்துராக்கு கையில் அணிந்திருந்த மோதிரத்தை மதன்குமார் நைசாக கழற்ற முயன்றுள்ளார். இதனை கண்டு சுதாரித்துக்கொண்ட முத்துராக்கு அவரை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மதன்குமார், முத்துராக்குவின் தலையை பிடித்து தள்ளி சுவரில் மோதியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த முத்துராக்கு மயங்கி கீழே விழுந்துவிட்டார். இதன்பின்னரும் ஆத்திரம் குறையாத மதன் குமார் அருகில் கிடந்த கடப்பாரையால் மேலும் தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். முத்துராக்கு அதே இடத்தில் உயிருக்கு போராடினார். அதிகாலையில் முத்துராக்கு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்ட உறவினர்கள் அவரை உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துபோனார். அவரது உடல் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து பதுங்கி இருந்த மதன்குமாரை கைது செய்தனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் தாயுடன் நடந்து சென்று கொண்டிருந்த 16 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்தி சென்று பாப்பாகுடி செல்லும் வழியில் காட்டுப்பகுதிக்குள் வைத்து 6 பேர் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மதன்குமார் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படுகொலை செய்யப்பட்ட முத்துராக்குவின் மனைவி காளிமுத்து ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு குருசாமி, ராமகிருஷ்ணன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!