வாலிபர் கழுத்தறுத்துக் கொலை – முன்னாள் ராணுவ வீரர் செய்த பயங்கரம்..!


வாலிபரை கழுத்தை அறுத்துக் கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர் பிணத்துடன் வீட்டுக்குள் இருந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சின்ன சுரைக்காய் பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 28), எலக்ட்ரிசீயன்.

தனியாக வசிந்து வந்த இவர், கடந்த 4-ந் தேதி புதிய பஸ் நிலையம் அருகே சாலையோரம் ரத்தக் காயத்துடன் பிணமாக கிடந்தார். அவரை யாரோ கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இதில் ராஜபாளையம் குறிஞ்சி நகரில் உள்ள சீதக்காதி தெருவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் நாராயணசாமி (55) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இவர் அடிக்கடி சதீஷ்குமாருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். எனவே கொலையில் தொடர்பு இருக்கலாம் என கருதிய போலீசார், நாராயணசாமியை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, அவர் தான் சதீஷ்குமாரை கொலை செய்தார் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் நாராயணசாமியை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-

சதீஷ்குமாருடன் நட்பாக பழகி வந்தேன். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது உறவினர் ஒருவருக்கும், எனக்கும் தகராறு ஏற்பட்டது.

இந்த முன் விரோதத்தில் உறவினருடன் சேர்ந்து சதீஷ்குமார் என்னிடம் வாக்குவாதம் செய்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதனால் அவரை நைசாக பேசி வீட்டிற்கு வரவழைத்தேன். அங்கு அவருக்கு மது கொடுத்தேன். இதில் அவர் மயங்கியதும், அரிவாளால் வெட்டியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தேன். பின்னர் உடலை ஈரத்துணியால் சுற்றி கட்டினேன். அதன் பிறகு பிணத்துடன் இரவில் வீட்டில் இருந்தேன்.

மறுநாள் அதிகாலை 3 மணியளவில் காய்கறி விற்கும் தள்ளுவண்டியை வாடகைக்கு எடுத்து வந்தேன். அதில், பழைய துணிகளுடன் சதீஷ்குமார் உடலையும் வைத்து கொண்டு சென்றேன்.

பின்னர் சங்கரன்கோவில் சாலையில் புது பஸ் நிலையம் அருகே உடலை வீசிவிட்டு வந்து விட்டேன். ஆனால் சதீஷ்குமாரின் மணிபர்ஸ் அவரிடம் இருந்ததால் அதனை வைத்து போலீசார் துப்பு துலக்கி என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!