தெலுங்கானா மாநில கவர்னராக தமிழிசை நியமனம்..!


தமிழக பாரதீய ஜனதா தலைவராக பதவி வகித்து வந்தவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்.

தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா கவர்னர்

இவர் கடந்த 2014-ம் ஆண்டு இந்த பதவியில் நியமிக்கப்பட்டார். தமிழிசை சவுந்தரராஜனின் 4 ஆண்டு பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, அவர் மீண்டும் தலைவராக நியமிக் கப்பட்டார். இரண்டாவது முறையாக தலைவராக நியமிக்கப்பட்ட அவரது பதவி காலம் வருகிற டிசம்பர் மாதத்துடன் முடிவடைய இருக்கிறது.

இந்த நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.

தெலுங்கானா கவர்னராக இருந்து வந்த இ.எஸ்.எல்.நரசிம்மனின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, அந்த மாநிலத்தின் புதிய கவர்னராக தமிழிசை சவுந்தரராஜனை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டு இருக்கிறார்.

தெலுங்கானா மாநிலத் தில் முதல்-மந்திரி சந்திர சேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி நடைபெற்று வருகிறது.

அரசியல் வாழ்க்கை

தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டு இருக்கும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு 58 வயது ஆகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 1961-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ந் தேதி பிறந்தார். இவர் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகள் ஆவார். சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்த இவர், பின்னர் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் மகப்பேறு மருத்துவம் படித்தார். கனடாவில் மேல் படிப்பு படித்து உள்ளார். இவரது கணவர் சவுந்தர ராஜன் பிரபல சிறுநீரக மருத்துவ நிபுணர் ஆவார்.

பாரதீய ஜனதாவில் பல்வேறு பதவிகளை வகித்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், 2013-ம் ஆண்டு அக்கட்சியின் தேசிய செயலாளர் ஆனார். 2014-ம் ஆண்டு தமிழக பாரதீய ஜனதா தலைவராக நியமிக்கப்பட்டார்.

தமிழிசை சவுந்தரராஜன் 2006-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியிலும், 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வேளச்சேரி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வட சென்னை தொகுதியிலும், சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!