கஞ்சா போதைக்கு அடிமையாகி காதல் மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்..!


பல்லடத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை கொலை செய்த கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பல்லடம் நல்லூர் பாளையம் காட்டுப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முகம் சிதைந்த நிலையில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பல்லடம் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தியபோது அவர் திருப்பூர் அனுப்பர் பாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜ், முனியம்மாள் ஆகியோரின் ஒரே மகள் சுகன்யா என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் சுகன்யா பிளஸ்-2 படித்தபோது மதுரையை சேர்ந்த இமானுவேல் என்பவரை பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் இமானுவேலுக்கு குடி மற்றும் கஞ்சா பழக்கம் இருந்தது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் அடிக்கடி வீட்டை மாற்ற வேண்டியதிருந்தது. சுன்யாவின் நிலையை அறிந்த பெற்றோர் சுகன்யா குடும்பத்தை அருகிலேயே குடி வைத்தனர். கடந்த 3 மாதத்துக்கு முன்பு சுகன்யாவை மயக்கம் அடைய செய்து விட்டு அவர் அணிந்திருந்த நகை மற்றும் மொபட்டை இமானுவேல் திருடிச்சென்றார்.

சில நாட்கள் தொடர்பு இல்லாமல் இருந்த இமானுவேல் மீண்டும் சுகன்யாவை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் பல்லடம் மகாலட்சுமி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தனது பெற்றோருடன் இமானுவேல் வசித்து வந்தார். சேர்ந்து வாழ்வது குறித்து சுகன்யாவிடம் பேச கடந்த 31-ந்தேதி இமானுவேல் அழைத்தார். அதன்படி பெற்றோருக்கு தெரியாமல் மொபட்டில் புறப்பட்டார். இமானுவேலுவை சுகன்யா சந்தித்தார். பின்னர் இருவரும் பெத்தாம்பாளையம் காட்டுப்பகுதிக்கு சென்றனர். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் இமானுவேல் மனைவி சுகன்யாவை கொலை செய்து முகத்தை கல்லால் சிதைத்தது தெரியவந்தது. இது குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இமானுவேலுவை தேடி வந்தனர். இமானுவேலுவின் பெற்றோர் சொந்த ஊரான மதுரைக்கு சென்று விட்டனர். இதனால் வீட்டு உரிமையாளர் இமானுவேல் தங்கிருந்த வீட்டுக்கு பூட்டு போட்டார்.

இந்நிலையில் நேற்று அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பல்லடம் இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) சரவணன், டி.எஸ்.பி. (பொறுப்பு)… சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், அமல்தாஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இமானுவேலு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அழுகிய நிலையில் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வெளியில் பூட்டிய வீட்டுக்குள் குளியல் அறை வழியாக இமானுவேல் நுழைந்தது தெரியவந்தது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!