70அடி கிணற்றில் விழுந்த 68 வயது மூதாட்டி! திருச்சியில் நடந்த மீட்புப்பணி


திருச்சியில் கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்புத்துறை வீரர்கள் கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனர். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

திருச்சி செந்தண்ணீர்புரம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி சாந்தா (வயது 68). இவரது வீட்டில் சுமார் 70 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. நேற்று காலை சாந்தா கிணற்றின் அருகே அமர்ந்து துணி துவைத்து கொண்டு இருந்தார். பின்னர் துணிகளை காயப்போடுவதற்காக கிணற்றின் மீது போடப்பட்டு இருந்த பலகையில் ஏறி நின்றார்.

அப்போது அவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு மயக்கம் வந்தது. உடனே கிணற்றின் மீது இருந்த பலகையில் அமர்ந்தார். எதிர்பாராதவிதமாக பலகை உடைந்து சாந்தா கிணற்றுக்குள் விழுந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது குடும்பத்தினர் கண்டோன்மென்ட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத்துறை வீரர்கள் வாகனத்தில் அங்கு சென்று கிணற்றுக்குள் பார்த்தனர்.

அங்கு சாந்தா இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு இருந்தார். உடனே கயிறு கட்டி அவரை மேலே கொண்டு வந்தனர். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!