மாரடைப்பில் இறந்த மகன் உடல் மீது மயங்கி விழுந்து தாய் மரணம்… !

ஆரல்வாய்மொழி அருகே மாரடைப்பால் இறந்த மகன் உடல் மீது மயங்கி விழுந்த தாய் உயிரிழந்தார். குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே திருப்பதிசாரம் திருவள்ளுவர்நகர் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி செல்லம்மாள்(90). தம்பதிக்கு 7 ஆண், 2 பெண் குழந்தைகள் உண்டு. இவர்களது 4வது மகன் மாடசாமி என்ற மனோகரன்(55). விவசாய தொழில் செய்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி பாப்பாத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. அண்ணன், தம்பிகள் அனைவரும் ஒரே காம்பவுண்டில் வீடுகள் கட்டி கூட்டு குடும்பம் போல் வசித்து வருகின்றனர். செல்லம்மாள் மகன் மாடசாமியின் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாடசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாடசாமிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது. உறவினர்கள் ஒரு ஆட்டோவில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாடசாமி ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. மகன் இறந்த விபரம் அறிந்த செல்லம்மாள் கதறி துடித்தார். பின்னர் மகன் உடல் மீது விழுந்தவர் மயங்கி சரிந்து இறந்தார். மகன் உயிரிழந்த சோகம் தாளாமல் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.- Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.