உலகின் பரபரப்பான விமான நிலையம் மின்சாரம் இன்றி முடங்கியது.. 1000 விமானங்கள் ரத்து..!


அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நகரில் ஹார்ஸ்ட்பீல்டு-ஜாக்சன் சர்வதேச விமான நிலையம் உள்ளது. உலக அளவில் மிகவும் பரபரப்பாக இருக்கும் இந்த விமான நிலையத்துக்கு ஒரு நாளில் சுமார் 2 ஆயிரத்து 500 விமானங்கள் வந்து செல்கின்றன. அதன்படி ஒரு நாளில் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வருகின்றனர்.

நேற்று முன்தினம் இந்த விமான நிலையத்தில் திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் மின் இணைப்பு கொடுக்கப்படாததால் விமான நிலையம் இருளில் மூழ்கியது.

இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த 1000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் இந்த விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்த நூற்றுக்கணக்கான விமானங்கள் திருப்பி விடப்பட்டன. வேறு இடங்களில் இருந்து ஹார்ஸ்ட்பீல்டு-ஜாக்சன் விமான நிலையத்துக்கு வர இருந்த பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டன. ஹார்ஸ்ட்பீல்டு-ஜாக்சன் விமான நிலையத்தில் பல மணி நேரமாக மின் இணைப்பு இல்லாததால் அங்கிருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் பரிதவிப்புக்கு ஆளானார்கள். விமானங்களில் ஏறிய பயணிகள் சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக விமானங்களுக்கு உள்ளேயே சிக்கி இருக்க வேண்டி நிலை உருவானது.

இதற்கிடையே பல மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்துக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து விமான நிலையத்துக்கு மின்சாரம் வினியோகம் செய்யக்கூடிய ‘ஜார்ஜியா பவர்’ நிறுவனம் வெளியிட்டு அறிக்கையில், பூமிக்கு அடியில் செல்லக்கூடிய மின்கம்பிகளில் தீப்பிடித்து, மின் இணைப்பு தடை பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!