இனிமேலும் என்னால் போராட முடியவில்லை… காபி டே ஓனர் சித்தார்த்தா எழுதிய கடைசி கடிதம்


ஒரு தொழிலதிபராக நான் தோல்வி அடைந்துவிட்டேன் என காபி டே ஓனரும் எஸ் எம் கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த்தா எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. எனவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி. சித்தார்த்தா. இவர் கஃபே காபி டே நிறுவனத்தின் உரிமையாளராவார். இவர் திங்கள்கிழமை தனது காரில் மங்களூருவுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது உல்லாலில் உள்ள நேத்ராவதி ஆற்றின் பாலத்தில் வாகனத்தை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து காரை விட்டு இறங்கிய பின்னர் அவர் யாருடனோ போனில் பேசியுள்ளார். பின்னர் மாலை 6.30 மணி வரை அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் ஒரு மணி நேரமாகியும் அவர் மீண்டும் வரவில்லை. இதையடுத்து அவரை டிரைவர் தேடியுள்ளார். அவர் எங்கும் காணாததால் பதற்றம் அடைந்த அவர், சித்தார்த்தாவின் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதையடுத்து புகாரின் பேரில் சித்தார்த்தாவை தேடும் பணிகள் நடைபெறுகின்றன.


அவர் தவறி விழுந்தாரா இல்லை தற்கொலை செய்து கொண்டாரா என்ற குழப்பத்தில் போலீஸார் தனது விசாரணையை தொடங்கியுள்ளனர். இதில் காபி டே ஊழியர்களுக்கு சித்தார்த்தா இறுதியாக எழுதி கடிதம் சிக்கியது.

நிறுவன இயக்குநர்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருக்கையில் கடும் முயற்சிகளை மேற்கொண்டும் எனது தொழிலை லாபகரமானதாக்க முடியவில்லை. என் மீது நம்பிக்கை வைத்திருந்தவர்களுக்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். 6 மாதத்திற்கு முன்பு நான் ஒரு வர்த்தகத்தை மேற்கொண்டிருந்தேன். இதற்காக எனது நண்பர் ஒருவரிடமிருந்து பெரும் பணத்தை கடனாக பெற்றேன். ஆனால் நான் விற்ற பங்குகளைத் திரும்ப வாங்கிக் கொள்ளுமாறு எனது பங்குகளை வாங்கிய ஒருவர் என்னை மிகவும் நெருக்குகிறார். நீண்ட காலம் நான் போராடி விட்டேன்.. இனிமேலும் என்னால் போராட முடியவில்லை. எனவே எனது போராட்டத்தை நிறுத்திக் கொள்ள தீர்மானித்து விட்டேன் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீஸார், சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இவரை மீட்பதற்காக 200-க்கும் மேற்பட்ட போலீஸார் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர். மேலும் ஹெலிகாப்டர் மற்றும் கடலோர காவல் படையினரின் உதவியையும் நாடியுள்ளனர்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!