காலில் விழுந்து கதறிய பள்ளி ஆசிரியர்… வெட்டிக் கொன்ற கொடூரன் – வீடியோ எடுத்த மக்கள்..!


தூத்துக்குடியில் குடும்ப தகராறு காரணமாக காலில் விழுந்து கதறிய பள்ளி ஆசிரியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட காட்சிகள் செல்போனில் பரவி வருகிறது.

அருப்புக்கோட்டை வதுவார்பட்டியைச் சேர்ந்தவர் வடிவேல் முருகன் (40). இவர் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வளமையம் சார்பில் செயல்படும், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கிரேசி (29). இவர்களுக்கு ரோசி ஏஞ்சல் (4) என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிரேசி தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து மகளுடன் தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். பிரியா (28) என்ற இளம்பெண்ணுடன் வடிவேல் முருகனுக்கு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. பிரியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, பெண் குழந்தை உள்ளது. கணவரிடம் விவாகரத்து பெற்றுள்ளார். வடிவேல் முருகனும், பிரியாவும் புதூரில் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர்.

வடிவேல் முருகனை மீண்டும் மனைவி கிரேசியுடன் சேர்ந்து வாழுமாறு பலமுறை மனைவியின் குடும்பத்தினர் கூறி வந்தனர். ஆனால் வடிவேல் முருகன் அதனை கண்டு கொள்ளவில்லை. நேற்று காலையில் வடிவேல் முருகன் பள்ளிக்கூடத்துக்கு வேலைக்கு சென்றார்.

கிரேசியின் தம்பியான என்ஜினீயர் அற்புதசெல்வன் என்ற ஆஸ்டின் (26) செல்போனில் வடிவேல் முருகனை தொடர்பு கொண்டு நேரில் பேச விரும்புவதாகவும், பள்ளிக்கூடத்துக்கு வெளியே வருமாறும் கூறினார். உடனே வடிவேல் முருகன் வந்தார். அப்போது அற்புதசெல்வன், வடிவேல் முருகனிடம் தன்னுடைய அக்காள் கிரேசியுடன் மீண்டும் சேர்ந்து வாழும்படி கூறினார். ஆனால் அதனை அவர் ஏற்கவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த அற்புதசெல்வன் மறைத்து வைத்திருந்த கத்தியால் வடிவேல் முருகனை சரமாரியாக குத்தினார். இதில் வடிவேல் முருகன் ரத்த வெள்ளத்தில் சிறிதுநேரத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அற்புதசெல்வன் அங்கிருந்து தப்பி ஓடினார். புதூர்-மதுரை மெயின் ரோட்டின் அருகில் நடந்த இந்த பயங்கர கொலை சம்பவத்தை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

என்னை விட்டு விடு என்று காலில் விழுந்து அவர் கதறுகிறார். ஆனால் ஈவு இரக்கம் இல்லாமல் அற்புதசெல்வன் குத்திக் கொலை செய்கிறார். இந்த காட்சிகளை பலர் படம் பிடித்தனர்.

வடிவேல் முருகனை அற்புதசெல்வன் பெரிய கத்தியால் சரமாரி குத்தும் போது புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்து ‘வாட்ஸ்-அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.

கூடி நின்றவர்கள் நினைத்திருந்தால் ஒன்று சேர்ந்து கொலையாளியை விரட்டியடித்திருக்க முடியும்.

ஆனால் அதனை யாரும் செய்யவில்லை. மாறாக தங்களது செல்போனில் படம் எடுப்பதிலேயே குறியாக இருந்தது வேதனையான வி‌ஷயமாகவே பார்க்கப்படுகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!