ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை – 2 வயது குழந்தை உயிர் தப்பிய அதிசயம்..!


மும்பை கோவண்டியை சேர்ந்தவர் சதாம். இவரது மனைவி சபினா பானு. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் இருக்கிறான். பணப்பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 10-ந் தேதி சதாம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் கணவரை இழந்த சபினா பானு மகனுடன் சாந்தாகுருசில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார்.

மேலும் கணவரின் இறப்பால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். இதனால் மகனுடன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார்.

இதன்படி சம்பவத்தன்று சபினா பானு கார் மற்றும் பாந்திரா ரெயில் நிலையங்களுக்கு இடையே வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு ரெயில் முன் மகனுடன் பாய்ந்தார். இதில், அவர் உடல் சிதறி பலியானார்.

அப்போது ரெயில் மோதியதில் சபினா பானுவின் மகன் அவரது கையில் இருந்து தண்டவாளத்துக்கு வெளியே தூக்கி வீசப்பட்டான். இதன் காரணமாக 2 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினான்.

தகவல் அறிந்து வந்த போலீசார் சபினா பானுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மகனை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!