இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியுடன் தொடர்பு..? கோவையில் சிக்கியது ஆவணங்கள்..!


இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. ஏப்ரல் மாதம் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று கொழும்பு நகரில் தேவாலயம், நட்சத்திர ஓட்டல்களில் சக்திவாய்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் 250-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் இலங்கையை உலுக்கியது.

இந்த தாக்குதல் குறித்து இந்தியா முன்கூட்டியே இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இலங்கை எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் அந்த சம்பவம் குறித்து இலங்கை உளவு பிரிவு விசாரணை நடத்தியதில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்தது. மேலும் இலங்கை குண்டுவெடிப்புக்கு காரணமான கும்பலுடன் சமூக வலைத்தளங்களில் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இலங்கை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஜஹரான் ஹசிமினுடன், முகமது அசாருதீன் முகநூல் மூலம் தொடர்பில் இருந்து உள்ளார். இவர்கள் 6 பேரும் தடை செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பரப்பி வந்துள்ளனர். இதன்மூலம் இவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிற்கு வாலிபர்களை சேர்க்கும் நோக்கத்தில் செயல்பட்டுள்ளது தெரியவந்து இருக்கிறது. அவ்வாறு புதிய வாலிபர்களை சேர்த்து தென் இந்தியாவில் குறிப்பாக கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

இந்த கும்பலின் தலைவனாக முகமது அசாருதீன் செயல்பட்டு உள்ளார். மேலும் கேரள மாநிலத்தில் ஐ.எஸ். தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட காசர்கோட்டை சேர்ந்த ரியாஸ் அபுபக்கர் என்பவருடன் தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த இப்ராகிம் என்கிற ஜாகின் ஷா நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

6 பேரின் வீடுகள் மற்றும் முகமது அசாருதீன் அலுவலகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட எலெக்டிரானிக் உபகரணங்களை அடிப்படையாக கொண்டு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் 6 பேரும் கொச்சி என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்கப்படுவார்கள் அல்லது சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!