காதல் திருமணம் செய்த மாணவிக்கு தந்தை கொடுத்த விசித்திர தண்டணை…!


மதுரை அருகே காதல் திருமணம் செய்த மாணவியை மொட்டையடித்து சித்ரவதை செய்த தந்தை உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை தட்டனூரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அபிநயா (வயது 19). அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.

அப்போது ஆட்டோ டிரைவர் வெங்கடேஸ்வரன் (25) என்பவருடன் அபிநயாவுக்கு காதல் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த அபிநயாவின் பெற்றோர் கண்டித்தனர். ஆனால் இருவரும் தொடர்ந்து காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி கருமாத்தூரில் உள்ள கோவிலில் வெங்கடேஸ்வரன் – அபிநயா திருமணம் செய்து கொண்டனர். பின்னர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

போலீசார் பெற்றோருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அபிநயாவை காதல் கணவர் வெங்கடேஸ்வரனுடன் அனுப்பி வைத்தனர். இருவரும் விருதுநகரில் வசித்து வந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இந்த நிலையில் அபிநயாவை தொடர்பு கொண்ட அவரது உறவினர்கள் அவர்களை வீட்டுக்கு வரும்படி கூறினர். முறைப்படி 2 பேருக்கும் திருமணத்தை நடத்துவதாகவும் தெரிவித்தனர்.

இதை நம்பிய அபிநயா கடந்த 2-ந் தேதி பெற்றோர் வீட்டுக்கு வந்தார். நல்ல நாள் குறித்து திருமணத்தை நடத்துவதாக கூறியதை அடுத்து அபிநயாவை விட்டு விட்டு வெங்கடேஸ்வரன் கோவை சென்று விட்டார்.

வீட்டில் அபிநயாவை அடைத்து வைத்து அவரது தந்தை கண்ணன் உள்ளிட்ட உறவினர்கள் சித்ரவதை செய்துள்ளனர். மேலும் அபிநயாவின் தலையை மொட்டையடித்து சாப்பாடு கொடுக்காமல் கொடுமைப்படுத்தி உள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த வெங்கடேஸ்வரன் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்திய போது அபிநயா மொட்டையடிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசாரும் விசாரணை நடத்தினர். மாணவியை சித்ரவதை செய்ததாக அவரது தந்தை கண்ணன், பெரியப்பா ரவி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.

காதல் திருமணம் செய்த மாணவியை மொட்டையடித்து சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!