வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர்..? இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


மணலி அருகே உள்ள எலந்தனூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் இன்பரசு (வயது 32). வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சரண்யா (23). பி.எஸ்சி பட்டதாரி. இவர்களுக்கு 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுபஸ்ரீ என்ற 8 மாத பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின்போது சரண்யாவுக்கு 25 பவுன் தங்கநகை, மாப்பிள்ளைக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் ரொக்கப்பணம், சீர் வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை இன்பரசுக்கும், சரண்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் மனமுடைந்த சரண்யா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக மணலி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணகி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே சரண்யாவின் தாய் காவேரி மணலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது மருமகன் இன்பரசு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தனது மகள் சரண்யா தற்கொலை செய்து கொண்டார். எனவே விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து போலீசார் இன்பரசுவை மணலி போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!