இதை நம்பவே முடியலை அடிக்கிறதையும் அடிச்சுட்டு ராக்கி கட்டினா சரியாய்ருமா.. கஸ்தூரி ஆவேசம்


குஜராத்தில் நடு ரோட்டில் இளம் பெண்மை சரமாரியாக அடித்து உதைத்த பாஜக எம்எல்ஏவின் செயலுக்கு நடிகை கஸ்தூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த செயல் கஸ்தூரியை மட்டும் அல்ல நாடு முழுவதும் உள்ளோரை கொதிக்க வைத்த சம்பவமாகும். பட்டப் பகலில் அத்தனை பேரும் பார்க்க, நடு ரோட்டில், காலால் உதைத்தும், சரமாரியாக அடித்தும் வெறித்தனமாக நடந்து கொண்டார் பல்ராம் தவானி. இவர்தான் அந்த பாஜக எம்எல்ஏ.

இவரிடம் உதைபட்டு அடிபட்டவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நித்து தேஜ்வானி என்ற பெண். நரோடா பகுதியைச் சேர்ந்தவர். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இந்த சம்பவத்திற்குப் பிறகு நடந்ததுதான் பெரிய கொடுமை.

அப்பெண்ணைக் கூட்டிக் கொண்டு பிரஸ்மீட் செய்தார் பல்ராம் தவானி. அப்போது அப்பெண்ணின் தலையில் கை வைத்து நான் இவரை இனி அடிக்க மாட்டேன். அடித்தது தவறுதான். இவர் எனக்கு சகோதரி போன்றவர். எங்களுக்குள் சரியான புரிதல் இல்லாமல் இது நடந்து விட்டது என்று கூறினார் பல்ராம்.


சொன்னதோடு நிற்காமல், அவரது கையில் ராக்கி கயிறைக் கொடுத்து கட்டி விடச் சொன்னார். அப்பெண்ணும் கட்டி விட்டார். இதையும் பப்ளிசிட்டியாக்கியது பாஜக. இந்த செயல் குறித்து தற்போது நடிகை கஸ்தூரி கருத்து கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கஸ்தூரி போட்டுள்ள டிவீட்டீல், “இதை நம்பவே முடியலை. இது பாஜக சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. நாடு முழுவதும் இதுபோன்ற கொடூர புத்தி படைத்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பெண்களுக்கு எதிராக நடக்கத்தான் செய்கிறார்கள். வெட்கம் கெட் பல்ராம் தவானி. அந்தப் பெண் மன்னித்தது அவரது பெருந்தன்மை. ஆனால் ராக்கியெல்லாம் கட்டுவது.. சகிக்க முடியலை” என்று கூறியுள்ளார் கஸ்தூரி.


அதேபோல இன்னொரு டிவிட்டில், ” இந்த ராக்கி மேட்டர் எல்லாம் புரியவில்லை. அப்பெண்ணுக்கு பெரிய ராக்கி கிப்ட் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். ஆனால் நித்து தேஜ்வானி போல் எல்லாம் நான் மன்னிக்க மாட்டேன். அப்படியெல்லாம் இருக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார் கஸ்தூரி.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!