சொத்து தகராறில் தந்தையே மகனை அடித்து கொன்ற கொடூரம்..!


கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள பெரவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 60).

இவரது மகன் அரிதாஸ் (36). தனியார் தொழிற்சாலை ஊழியர். இவருக்கு திருமணம் ஆகி கோடீஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

அரசின் தொகுப்பு வீடு கட்ட பணம் இல்லாதபோது தந்தை ரவிக்கு அவரது மகன் அரிதாஸ் பணம் கொடுத்து அந்த வீட்டை முழுமையாக கட்டி முடித்து உள்ளார். இதனையடுத்து அந்த வீட்டில் தனக்கும் உரிமை உண்டு என மகன் அரிதாஸ் கூறி வந்து உள்ளார்.

ஆனால் அரிதாசுக்கு வீட்டில் உரிமை இல்லை என்றும் வீட்டை விட்டு வெளியேறுமாறும் தந்தை ரவி கூறி வந்தார். இதனால் தந்தை மகனுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று இரவு மேற்கண்ட சொத்து பிரச்சினை காரணமாக ரவிக்கும், அரிதாசுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலாக மாறியது. ஆத்திரம் அடைந்த ரவி உருட்டுக்கட்டையால் அரிதாசை தாக்கினார். இதில் அவர் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ரவியை கைது செய்தனர். மேலும் கொலை தொடர்பாக அரிதாசின் தாய் ஜெயலட்சுமியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறில் மகனை, தந்தையே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!