ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளிப்படிப்பை முடிக்காத போலி ஐபிஎஸ் அதிகாரி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் அபய் மீனா. இவர் தன்னை ஒரு ஐபிஎஸ் அதிகாரி என கூறி வலம் வந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் கலந்துக் கொண்டுள்ளார்.
மேலும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆவது எப்படி என பல்வேறு முறை உரையாற்றியும் வந்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல், தனது வாகனத்தில் போலி அரசு முத்திரையையும் பதித்து சுற்றித்திரிந்துள்ளார்.
ஒரு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்ள அபய் சென்றபோது, அவரது ஐடிகார்டை போலீசார் செக் செய்துள்ளனர். அபயின் போலி ஐடி கார்டில் ‘Branch’ என்பதற்கு பதிலாக ‘Branche’ என பிழையாக இருந்துள்ளது. இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் அவர் ஐபி எஸ் அதிகாரி இல்லை என்பதும், திடுக்கிடும் தகவலாக அவர் பள்ளிப்படிப்பையே முடிக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. அபய், உடனடியாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.-Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!