ராகுல் காந்திக்காக நடுரோட்டில் தீக்குளிக்க முயன்ற தொண்டர்!

நாடாளுமன்ற தேர்தலில் 10 சதவீத இடங்களை கூட கைப்பற்ற முடியாத பரிதாப நிலைக்கு பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டது. வெறும் 52 இடங்களை மட்டுமே காங்கிரஸ் வென்ற நிலையில், கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது பாரம்பரிய தொகுதியான அமேதியில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவினார்.

தோல்வி குறித்து ஆராய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம் கடந்த 25-ந் தேதி நடந்தது. இதில் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா முடிவை அறிவித்தார். ஆனால் அதை காரியக்கமிட்டி ஏற்க மறுத்து விட்டது. அத்துடன் கட்சி நிர்வாகத்தை முழுமையாக மாற்றி அமைக்க அவருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜினாமாவில் உறுதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவர் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வரவில்லை. கடந்த 2 நாட்களாக கட்சித்தலைவர்கள் யாரையும் சந்திக்கவும் இல்லை.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தி தொடர்ந்து வழிநடத்த வலியுறுத்தி, சென்னை தேனாம்பேட்டையில் தமிழக காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது.

கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில், சஞ்சய் தத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். பேரணியில் திடீரென தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.- Source: dailythanthi


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.