நான்தான் கொன்றேன்.. இல்லை.. எனக்கு சம்பந்தமில்லை.. குழப்பும் ரோஹித் திவாரி மனைவி அபூர்வா!


உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகனான ரோகித் திவாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது மனைவியான அபூர்வாவின் நடத்தை, குழப்பத்திற்குரியதாகவும் அதே சமயம் வித்தியாசமாக உள்ளதாகவும் காவல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காவல்துறை உயரதிகாரி ஒருவர், ஒருசில நேரங்களில் தனது கணவர் கொல்லப்பட்டதை நினைத்து வருந்துவதாகவும், ஆனால் சில நேரங்களில் அவர் கொலையுண்டதை நினைத்து மகிழ்ச்சியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த மனநிலை பார்ப்பவரை குழப்பமடைய செய்வதாக அதிகாரி கூறியுள்ளார்.

அபூர்வாவிடம் நான்கு நாள் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் போது, திவாரியை கொலை செய்தது குறித்து ஒருநாள் கூட வருத்தப்பட்டு பேசவில்லை. ஆனால் தற்போதோ அவர் ஏப்ரல் மாதம் 15 மற்றும் 16ம் தேதி ரோகித் திவாரிக்கு நடந்த சம்பவங்களை நினைத்து மிகவும் வருத்தப்படுவதாக கூறியுள்ளார்.

வருத்தமாக இருந்த போது அபூர்வா கூறிய தகவலையும் அந்த அதிகாரி கூறியுள்ளார். தனக்கும் ரோகித் திவாரிக்கும் இடையில் அவரது தாயினால் தான் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக கூறியுள்ளார். ரோகித்தின் தாய் உஜ்வாலாவினால் தான், தங்களுக்கு இடையில் மிகப்பெரிய பிரிவு உண்டானதாக அபூர்வா கூறியுள்ளார்.

ரோகித் திவாரி கொல்லப்பட்ட அன்று இரவு ஒரே அறையில் தங்கியிருந்த அவருக்கும் அபூர்வாவிற்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. சண்டையின் போது ரோகித்திற்கும் அவருடைய தூரத்து சொந்தமான அண்ணி முறையிலான பெண் ஒருவருக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி கேள்வி எழுப்பி அபூர்வா கடுமையாக சண்டையிட்டுள்ளார்.

மேலும் அந்த பெண்ணுடன் சேர்ந்து மது அருந்துவது பிடிக்கவில்லை என்றும் அபூர்வா சண்டையிட்டுள்ளார். அபூர்வாவின் வேதனையை ரோகித் கிண்டல் செய்துள்ளார். இது அபூர்வாவை பயங்கரமாக கோபப்படுத்தியுள்ளது. இதனையடுத்து ரோகித் திவாரியின் கழுத்தை நெறித்து அவரை கொன்றுள்ளார் அபூர்வா.

கொலை முயற்சியின் போது சத்தம் போட முயன்ற ரோகித்தின் முகத்தில், தலையணையை வைத்து அழுத்தியுள்ளார் அபூர்வா என போலீஸ் அதிகாரி கூறியுள்ளார். பின்னர் கொலை செய்யப்பட்டதற்கான சாட்சியங்கள் அனைத்தையும் அபூர்வா அழித்துள்ளார். கிட்டத்தட்ட 14 மணிநேரத்திற்கும் மேல் இந்த மரணத்தை ரகசியமாக வைத்திருக்க அவரால் முடிந்துள்ளது.

அதன் பின்னரே ரோகித் மாரடைப்பால் மயங்கி விழுந்து விட்டதாக கூறி அவரது தாய்க்கு தகவல் தெரிவித்துள்ளார் அபூர்வா என அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!