மரக்கட்டையில் கார் மோதல் – தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் உடல் நசுங்கி பலி..!


நண்பர்களுடன் சுற்றுலா சென்றபோது நிகழ்ந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளித்தென்னல் எம்.என்.குப்பத்தை சேர்ந்தவர் ராஜ்(வயது 32). தமிழக வாழ்வுரிமை கட்சியின் கண்டமங்கலம் ஒன்றிய செயலாளராக இருந்தார். இவர், தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் வீரா(27), ரத்தினராஜ் மகன் நாகராஜ்(24), தேசிங்கு மகன் தேவநாதன்(23) ஆகியோருடன் சுற்றுலா செல்ல முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு 4 பேரும் ஒரு காரில் சுற்றுலா புறப்பட்டனர். விழுப்புரத்துக்கு வந்தபோது, சுற்றுலா செல்ல கூடுதலாக பணம் தேவைப்படும் என்று எண்ணிய ராஜ், வீட்டிற்கு சென்று பணத்தை எடுத்துவரலாம் என்று நண்பர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள், மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர். காரை வீரா ஓட்டினார்.

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே எல்.ஆர்.பாளையம் என்ற இடத்தில் நள்ளிரவில் சென்றபோது, சாலையோரத்தில் வைத் திருந்த மரக் கட்டை மீது கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் வீரா, ராஜ் ஆகிய இருவரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

படுகாயமடைந்த நாகராஜ், தேவநாதன் ஆகிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே விபத்து பற்றி தகவல் அறிந்ததும் வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜ், வீரா ஆகியோரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்துக்குள்ளான கார் மீட்கப்பட்டு, போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!