பயங்கரவாதிகளின் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் – இலங்கையில் 106 பேர் கைது..!


இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் வெளிநாட்டவர்கள் மற்றும் சிறார்கள் உட்பட 253 பேர் கொல்லப்பட்டதுடன் 500-க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறித்த தாக்குதலின் முக்கிய மூளையாக செயல்பட்ட ஜஹ்ரான் ஹாஷிமின் மாமனார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

முகம்மது ஹுசைன் அப்துல் காதர் என்பவரின் மகளையே ஜஹ்ரான் ஹாஷிம் திருமணம் செய்து கொண்டுள்ளார். அப்துல் காதரின் குடியிருப்புக்கு தமது உறவினருடன் அடிக்கடி சென்று வந்துள்ளார் ஹாஷிம். ஒருகட்டத்தில் அப்துல் காதரை தனியாக சந்தித்து பேசிய ஹாஷிம், தாம் ஒரு மசூதியில் கல்வி பயின்று வருவதாகவும், அவரது மகளை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஹாஷிம் திருமண கோரிக்கையை முன்வைக்கும்போது அப்துல் காதரின் மகளான பாத்திமா ஷாதியாவுக்கு 15 வயது என கூறப்படுகிறது. ஹாஷிமின் குடும்பம் தமக்கு முன்னரே தெரியும் என்பதால் தமது மகளை அவர் திருமணம் செய்வதில் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை என அப்துல் காதர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 28 ஆம் தேதி, சாய்ந்தமருதுவில் உள்ள ஹாஷிமின் குடியிருப்புக்குள் புகுந்த போலீசாரிடம் சிக்காமல் இருக்க, அவரது தந்தையும் இரு சகோதரர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், போலீசாரின் தாக்குதலிலே அவர்கள் கொல்லப்பட்டனர் என இருவேறு கருத்துக்கள் வெளியாகின. இந்த நிலையில் அப்துல் காதரின் துணையுடனே, பாத்திமாவையும் அவரது மகளையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

இருவரும் காயங்களுடன் போலீசாரால் மீட்கப்பட்டனர். இலங்கை தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக இதுவரை 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!