ஜென்மச்சனியால் துன்பத்தையே அனுபவித்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு இனி எப்படியிருக்கும்?


வரும் டிசம்பர் 19 ம் நாள் சனிப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது. இதில் இதுவரை விருச்சிக ராசியில் வீற்றிருந்த சனிபகவான், சனிப்பெயர்ச்சியை அடுத்து தனுசு ராசிக்குப் பெயர்ந்து செல்கிறார்.

எந்தப் பக்கம் செல்வது என்று கரை தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு, அவர்களுடைய துயரங்களைத் தீர்த்துக் கரை சேர்க்கும் விதமாக 2017 அக்டோபர் மாதம் 26-ம் தேதி நடைபெற இருக்கும் சனிப் பெயர்ச்சி அமைய இருக்கிறது.

ஏழு ஜென்மத்திற்கு உண்டான சோதனைகளை இந்த ஒரு ஜென்மத்தில் விருச்சிகத்தினர் அனுபவித்துவிட்டீர்கள். நீங்கள்தான் விருச்சிக ராசியாக இருக்க வேண்டும் என்பதில்லை. உங்கள் குடும்பத்தில் யாராவது ஒருவர் விருச்சிகமாக இருந்தாலே அந்த குடும்பத்தில் 2012 முதல் சோதனைகள் ஆரம்பமாகிவிட்டன.

குறிப்பாக சொல்லப் போனால் வீட்டில் வேறு யாராவது ஒருவர் மேஷ ராசியாக இருந்தால் அந்தக் குடும்பம் அளவற்ற மன அழுத்தங்களையும், துன்பங்களையும் சந்தித்தது. பிறந்த ஜாதகம் வலுவாக உள்ள மிகச்சில விருச்சிக ராசிக்காரர்களுக்கு மட்டுமே பாதிப்புகள் தாங்கிக் கொள்ளும்படி இருந்தன.


ஜென்மச்சனியின் தாக்கத்தினால் நெருங்கிய உறவினரை இழந்தவர்கள், வேலையைப் பறி கொடுத்தவர்கள், தூக்கம் தொலைத்தவர்கள், கடன் தொல்லையில் அவஸ்தைப் பட்டவர்கள், உடல்நலம் கெட்டவர்கள் இன்னும் சில சொல்ல முடியாத பிரச்னைகளில் சிக்கியவர்கள் அனைவரும் இனிமேல் அனைத்தும் சாதகமாக அமைந்து நிம்மதி கிடைக்கப் பெறுவீர்கள்.

என்னதான் யோகசாலியாக இருந்தாலும் எல்லோரையும் சனி ஆட்டி வைத்து விட்டார். 40 வயதுக்குட்பட்ட எந்த ஒரு விருச்சிக ராசிக்காரரும் ஏதாவது ஒரு வகையில் இந்த ஏழரைச் சனியால் பாதிப்புகளை அடைந்தீர்கள் என்பது கண்கூடாகத் தெரிந்தது.

இப்போதைய சனி மாற்றத்தின் மூலம் முழுவதுமாக ஏழரைச்சனி நீங்கவில்லை என்றாலும் மூன்று பிரிவாக அமையும் சனியின் தாக்கத்தில், நடுப்பகுதியான ஜென்மச்சனி எனப்படும் இரண்டரை ஆண்டு காலமே கடுமையான கெடுபலன்களை தரும் என்பதால் இனிமேல் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சோதனைகள் எதுவும் நடக்காது என்பது உறுதியான ஒன்று.

அதைவிட மேலாக சனிபகவான் எங்கெல்லாம் பாதிப்புகளைக் கொடுத்தாரோ, எப்படிப்பட்ட இடத்தில் உங்களை அடித்தாரோ, அவைகளை அவரே நீக்கி இனி வேதனைகளும், சோதனைகளும் மாறுவதற்கான வழிவகைகளைச் செய்வார். எனவே இதுவரை கெடுபலன்கள் நடப்பதை மட்டும் பார்த்து மனஅழுத்தங்களில் இருப்பவர்களுக்கு சோதனைகள் விலகி படிப்படியாக நன்மைகள் நடப்பதை கண்கூடாகக் காண முடியும்.


கடந்த ஐந்து ஆண்டுகளில் பணம் என்றால் என்ன, நல்லவர் யார், கெட்டவர் யார், உறவுகள் எப்படிப்பட்டது, நட்பு என்பது என்ன என்பதை சனிபகவான் புரிய வைத்து விட்டதால் அவர் தந்த அனுபவங்களைக் கொண்டு இனிமேல் நீங்கள் வாழ்க்கையில் ஒரு சிறப்பான நிலையை அடைய இந்த சனிப்பெயர்ச்சி துணை நிற்கும்.

இந்தப் பெயர்ச்சியினால் இளைய பருவத்தினர் இதுவரை இருந்து வந்த ஏமாற்றத்திலும், மன அழுத்தத்திலும் இருந்து விடுபடுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடமிருந்து விலகி இருந்தவர்கள தற்போது பக்கத்தில் வருவார்கள். இனிமேல் வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லத் துவங்கும்.

இதுவரை இருந்து வந்த தேவையற்ற பயஉணர்வுகளும், கலக்கமான மன நிலையும், சிறிய விஷயங்களைக் கூட பெரிதாக்கிப் பார்த்து பயந்து கொண்டிருந்த சூழ்நிலையும் இனிமேல் விலகி மனத்தில் ஒரு புத்துணர்ச்சி பிறந்து புதுமனிதராக மாறப் போகிறீர்கள்.

சனி மாற்றத்தினால் அனைத்து நன்மைகளும் நடக்கும். தாமதமாகி வந்த எல்லா பாக்கியங்களும் கை கூடும். சிக்கலில் ஆழ்த்திக் கொண்டிருந்த கடன் தொல்லை ஒழியும், பணபிரச்னை தீரும். கஷ்டங்களைக் கொடுத்து வந்த மகன், மகளின் பிரச்னைகள் தீர்த்து புத்திர விஷயத்திலும் நிம்மதி அடைவீர்கள். காரணம் தெரியாமல் தடையாகிக் கொண்டிருந்த மகன், மகளின் திருமணத்தை நல்லபடியாக நடத்தி ஊர் வாயை அடைக்க முடியும்.


ஆரோக்கியம் மேம்படும். மருத்துவத்துக்கு கட்டுப்படாமல் இருந்து வந்த நோய்கள் தீரும். கோர்ட், கேஸ் என்று மன வருத்தங்களில் இருந்தவர்களுக்கு வழக்கு சாதகமாக முடியும். இனிமேல் நீதிமன்றம், காவல்நிலையம் என்று அலைய வேண்டி இருக்காது.

வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த போட்டிகளும், எதிர்ப்புகளும், பொறாமைகளும் விலகி அனைத்தும் நன்மை தரும். பணிபுரியும் இடங்களில் இருந்து வந்த நிம்மதியற்ற சூழல் இனிமேல் இருக்காது. அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு வருமானங்கள் சிறப்பாக இருக்கும். தொல்லை கொடுத்த அதிகாரிகள் மாறுதலாகி உங்களைப் புரிந்து கொண்டவர்கள் வருவார்கள். தடைப்பட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவைகள் கிடைக்கும்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் நல்ல மாற்றங்களை உணர்வார்கள். தொழில் சீர்படும். லாபத்தை சேமிக்க முடியும். செலவுகள் குறையும். விரையங்கள் இருக்காது. வியாபாரிகளுக்கு வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். நல்ல வேலைக்காரர்கள் அமைவார்கள். கூட்டுத் தொழிலில் இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும்.

தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தைவழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும்.


அண்ணன், தம்பி, அக்கா, தங்கை உறவுகள் பலப்படும். திருமணம் தாமதமான அக்கா, அண்ணன் போன்றவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணமாகும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று பிரிந்திருந்தவர்கள், வெளியூரில் பிரிந்து வேலை பார்த்தவர்கள் ஒன்று சேருவீர்கள்.

பரிகாரங்கள்:

பாத சனி நடப்பில் உள்ளதால் அருகிலுள்ள பழமையான ஈஸ்வரன் கோவிலில் அருள்புரியும் காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.

சனியின் கடுமை குறையும். கெடுதல்கள் இருக்காது. இதையே நெய் தீபமாக ராமபக்தன் ஸ்ரீஹனுமனுக்கும் செய்யலாம்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!