மசாஜ் சென்டரில் அரங்கேறிய கூத்து.. கையும் களவுமாக சிக்கிய உதவி ஆணையர்!


சென்னை அசோக்நகர் காவலர் உதவி கமிஷனர் வின்சென்ட் ஜெயராஜை கைது செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மசாஜ் சென்டர் லஞ்ச விவகாரத்தில் அவர் சிக்கியதாகத் தெரிவித்துள்ளனர்.

பிற்பகலில் உதவி கமிஷனர் அறைக்குள் சென்ற ஒருவர் அவரிடம் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அதிரடியாக நுழைந்த லஞ்ச ஒழிப்புப் போலீசார், உதவிக் கமிஷனர் வின்சன்ட் ஜெயராஜை கைது செய்தனர்.

அசோக்நகர் 5வது அவென்யூவில் மசாஜ் சென்டர் நடத்திவருபவர் செந்தில்குமரன். இந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாகக் கூறி போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து உதவி கமிஷனர் வின்செண்ட் ஜெயராஜ் பெயரைக் கூறிய போலீசார், மாதந்தோறும் 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கத் தவறினால் கைது செய்து சிறையில் அடைத்து விடுவதாகத் தெரிவித்ததாக் கூறப்படுகிறது.

இது குறித்து செந்தில்குமரன் லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் அளித்த புகாரில் தான் ஸ்பா நடத்துவதற்கு உரிமம் உள்ளதாகத் தெரிவித்ததாகவும், இதையடுத்து போலீசாரின் அறிவுரைப்படி தான் உதவி கமிஷனர் வின்சென்ட் ஜெயராஜை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார். அப்போது அவர் `நீ ஒரு பிசினஸ் மேன் என்றும் எப்படியாவது தொழில் செய்து எனக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்தாக வேண்டும் எனத் மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.

லஞ்ச ஒழிப்புப் போலீசாரின் யோசனைப் படி போலீசார் கேட்ட பணத்தைக் கொடுக்க செந்தில்குமரன் சம்மதம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனுப்பிய ரசாயனம் தடவிய பணத்தை செந்தில் குமரன் உதவி கமிஷனர் அறைக்கு கொண்டு சென்றார். அதை அவர் கொடுத்த போது வின்சென்ட் ஜெயராஜை பிடித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்.

உதவி கமிஷனர் கைது விவகாரத்தில் மசாஜ் சென்டருக்குச் சென்ற போலீஸாரிடமும் விசாரணை நடத்திவருவதாகத் தெரிவித்த போலீசார், விசாரணை முடிவில்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெரியவரும் என்றனர்.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!