திருமணத்துக்கு பின் தம்பதிகளுக்கிடையே அடிக்கடி சண்டை வருவதற்கு என்ன காரணம்?


திருமணத்துக்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொண்டு, அன்பு செலுத்தினாலே இல்லற வாழ்வு சிறக்கும். ஆனால், அந்தப் புரிதல் ஏற்படச் சிறிது காலம் தேவை.

கணவன் -மனைவி இடையேயான பிரச்சனைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இளம் தம்பதிகள் விவாகரத்து கேட்டு நீதிமன்றப் படியேறுவதும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. தம்பதிகளிடையே சரியான புரிதல் இல்லாததே இதற்கெல்லாம் காரணமாகச் சொல்லப்படுகிறது. திருமணத்துக்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொண்டு, அன்பு செலுத்தினாலே இல்லற வாழ்வு சிறக்கும். ஆனால், அந்தப் புரிதல் ஏற்படச் சிறிது காலம் தேவை.

திருமணமான புதிதில் தம்பதிகளுக்கு இடையே பிரச்சனைகள் வருவது இயல்பு. காரணம், இருவருக்குமான எதிர்பார்ப்புகள் வெவ்வேறாக இருக்கும். அவர்கள் இருவரது கனவுகளும் மாறுபட்டதாக இருக்கும். மேலும், வயது குறைவு என்பதால் அனுபவமற்றவர்களாக இருப்பார்கள். இத்தகைய காலகட்டத்தில் இருவரது ஆசையும், எதிர்பார்ப்பும் முழுமையாகப் பூர்த்தியாகும் என்று சொல்லமுடியாது.

தம்பதிகள் 40 வயதை அடைந்தால் அவர்கள் முதிர்ச்சியடைவதுடன் பக்குவத்துக்கும் வந்துவிடுவார்கள். அதனால், அவர்களிடையே எழும் சிக்கல்களும் குறைந்துபோகும். அதன்பிறகு குழந்தை வளர்ப்பு போன்ற புதிய பொறுப்பு உணர்ச்சிகள் வந்துவிடும். பொறுப்புகள் அதிகமாகும்போது சகிப்புத் தன்மை குறைய ஆரம்பிக்கும். அதனால், அந்த நேரத்தில் எழும் பிரச்னைகள் ஆரம்பகாலத்தைவிட ஆழமானதாக இருக்கும்.


அதன் விளைவாக ஒருவர் மீது ஒருவர் பழி சொல்வது அதிகரிக்கும். இந்த மனப்பான்மையால் சிக்கல்கள் இன்னும் தீவிரமாக மாற வாய்ப்பிருக்கிறது. இந்தச் சூழலில் இருவருக்கும் இடையேயான பரஸ்பர புரிதலும், அன்பும் அவசியமாகிறது. அது இல்லாதபோது இதுபோன்ற சிக்கல்கள் தீர்க்க முடியாததாக மாறிவிடும். இதுபோன்ற சூழலில் உளவியல் ஆலோசனை பெறுவதில் தவறில்லை.

திருமணமான புதிதில் தம்பதிக்குள் ஆரம்பத்தில் ஓர் ஈர்ப்பு இருக்கும். அங்கே தாம்பத்தியம் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கும். அப்போது பிரச்னைகள் இருந்தாலும் தாம்பத்தியம் அதைத் தீர்த்துவிடும். ஆனால், 40 வயதுக்குமேல் முதிர்ச்சி பெற்றுவிடுவதால் தாம்பத்தியம் அதைச் சரிசெய்துவிடும் என்று சொல்லமுடியாது. பலருக்குத் தீவிர சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது. இப்போதைய சூழலில் மனநல மருத்துவரின் ஆலோசனைகள் அவசியம் தேவைப்படும்.

இல்லறத்தில் சிக்கல் ஏதும் ஏற்படாமலிருக்கத் தம்பதியருக்கான சில ஆலோசனைகள் அவசியமாகும். அவை என்னென்ன என்று பார்ப்போம்.

* தம்பதிக்கிடையே சிக்கல் வந்தால், ஒருவர் மற்றவர் மீது பழிபோட்டு, திருப்தியடையக் கூடாது.

* எந்தவொரு பிரச்னையையும் தம்பதிகள் உணர்வுபூர்வமாக அணுகக்கூடாது. அதை அறிவுபூர்வமாக அணுகும் பக்குவத்தையே இருவரும் வளர்த்துக் கொள்ளவேண்டும்.

* ஒரு சிக்கல் மற்றொருவரால்தான் வருகிறது என்ற மனப்பான்மை வரக்கூடாது. அதற்கு இருவருமே காரணமாக இருக்கலாம் என்பதை அறியவேண்டியது அவசியம்.

* சிக்கல்கள் வரும்போது, தான் எந்த வகையில் காரணம் என்பதையும், அதைச் சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை இருவருமே திறந்த மனதுடன் அணுகவேண்டும்.

* தம்பதிக்கிடையே எத்தகைய பிரச்னைகள் ஏற்பட்டாலும் இருவருக்குமிடையே அன்பும், புரிதலும் இருக்கவேண்டும். அப்படியிருந்தால் பிரச்னையை எளிதில் தீர்த்துவிடலாம்.

* இன்றைய சூழலில் இப்படியொரு சம்பவம் நடந்துவிட்டது. இதற்கு அவரது (கணவனோ/மனைவியோ) கேரக்டர் காரணமல்ல, சூழல் காரணமாக அது நடந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ளவேண்டும். பிரச்னையைப் பொதுமைப்படுத்திப் பேசக்கூடாது. இவற்றையெல்லாம் கடைப்பிடிக்கும்போது தம்பதியர் மகிழ்ச்சியுடன் வாழலாம்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!