மகர ராசிக்காரர்களே தேவையற்ற வீண் விரயங்களை சந்திப்பீர்கள் – விகாரி புத்தாண்டு பலன்கள்..!


ஆக்கும் சக்தியும், அழிவதை தடுக்கும் சக்தியும் கொண்ட மகர ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி வருடம் 6-ல் ராகு சஞ்சரிப்பதாலும், ஆண்டின் முற்பாதியில் குருபகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதாலும் குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த கெடுபிடிகள் வம்பு வழக்குகள் யாவும் விலகும்.

உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உங்கள் ஜென்ம ராசிக்கு 12-ல் சனி சஞ்சரித்து ஏழரை சனியில் விரயசனி நடைபெறுவதால் தேவையற்ற வீண் விரயங்களை சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பயணங்களில் கவனமுடன் இருப்பது, உணவு விஷயத்தில் அக்கறை எடுத்த கொள்வது நல்லது. சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்யமாட்டார் என்றாலும் எந்தவொரு விஷயங்களிலும் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே எதையும் எதிர் கொண்டு வெற்றிப் பெறக்கூடிய வலிமையை பெறுவீர்கள். 12-ல் கேது சஞ்சரிப்பதால் தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் அமையும். பல பெரிய மனிதர்களின் நட்புகளும் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தினை அடைய முடியும்.


தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் சற்றே குறையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற இட மாற்றங்கள் ஏற்படும் என்றாலும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிட்டும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்கள் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. திருக்கணிதப்படி வரும் ஐப்பசி மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் 05-11-2019 (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) முதல் குருபகவான் விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் பணவிஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாவதுடன் கடனில்லாத கண்ணியமான வாழ்க்கையை வாழ்வீர்கள்.

உடல் ஆரோக்கியம்
உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டபடியே இருக்கும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட முடியாத அளவிற்கு மனக்குழப்பங்களும், நிம்மதி குறைவும் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது உத்தமம். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைக்க முடியும்.

குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்களிடையே விட்டுக் கொடுத்து நடப்பதின் மூலம் பல நல்ல காரியங்களை சாதித்து கொள்ள முடியும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலனை அடைவீர்கள்.


உத்தியோகம்
பணியில் சற்று கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காவிட்டாலும், கிடைப்பதை பயன்படுத்திக் கொள்வது நல்லது. யாருடைய விஷயங்களிலும் தலையீடு செய்யாமல் இருப்பதால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

தொழில் வியாபாரம்
கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகள் போட்டி பொறாமைகளால் கை நழுவிப் போகும் என்பதால் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் விட்டுக் கொடுத்து செல்வதும் தட்டி கொடுத்து வேலை வாங்குவதும் நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெறுவீர்கள். எதிலும் எதிர்நீச்சல் போட்டு முன்னேறி விடக் கூடிய ஆற்றல் ஏற்படும். எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

கொடுக்கல்- வாங்கல்
ஆண்டின் தொடக்கத்தில் பண வரவுகள் சரளமாக இருக்கும் என்றாலும் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிக்க முடியும் என்றாலும் சில நேரங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க நேர்ந்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

அரசியல்
மேடை பேச்சுக்களில் கவனமுடன் செயல்படுவது தேவையற்ற வாக்குறுதிகளை வழங்காது இருப்பது நல்லது. பத்திரிக்கை நண்பர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு உங்களுக்கு மகிழ்ச்சினை ஏற்படுத்தும். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய சற்று கஷ்டப்பட வேண்டியிருந்தாலும் சொன்னதை செய்து முடிப்பீர்கள். கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டி வரும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடனிருப்பது நல்லது.


விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டியிருக்கும். புழு, பூச்சிகளின் தொல்லைகளும் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். முடிந்தவரை தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாது இருப்பது நல்லது.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் நடந்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல் முடியும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமையுடன் செயல்படுவீர்கள். முடிந்த வரை குடும்ப பிரச்சினைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாது இருப்பது மிகவும் நல்லது. திருமண சுபகாரியங்கள் ஆண்டின் முற்பாதியில் கைகூடும். உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

மாணவ- மாணவிகள்
கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். பயணங்களில் சற்று நிதானமுடன் செயல்படுவது, தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும். அரசு வழியில் ஒரளவுக்கு உதவிகள் கிட்டும்.-Source: gastroenterology

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!