வாக்கு சேகரித்துக் கொண்டு இருக்கும் போதே திடீரென மயங்கி விழுந்த மன்சூர் அலிகான்..!


திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சியின் வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் கடந்த 1 மாதத்துக்கும் மேலாகவே மக்களை நேரடியாக சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார்.

கட்சி சின்னம் ஒதுக்கப்பட்ட பிறகு கரும்பு விவசாயி சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். ஊர் மக்கள் அனைவரும் சாப்பிட வேண்டும் என்றால் விவசாயிகள் வாழ வேண்டும் என்று நூதன பிரசாரம் செய்து வருகிறார்.

நேற்று நிலக்கோட்டை தொகுதிக்குட்பட்ட அழகம்பட்டி பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது மக்களை சந்தித்து நேரடியாக வாக்கு சேகரித்துக் கொண்டு இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அவருடன் வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மன்சூர்அலிகான் நிலக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்ததில் ரத்த அழுத்தம், உடல் சோர்வு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இ.சி.ஜி. உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் அவருக்கு நடத்தப்பட்டது. தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!