ஜான்சன் அண்ட் ஜான்சன் ஷாம்புவில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!


ராஜஸ்தானில் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஷாம்புவில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் கலந்துள்ளதாக ஆய்வின் முடிவில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைச்சகம், ராஜஸ்தானில் வெவ்வேறு இடங்களில் உள்ள 24 ஜான்சன் அண்ட் ஜான்சன் னோ டியர்ஸ் பேபி ஷாம்பு, மற்றும் பவுடர் பாட்டில்களை கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில் 2021ம் ஆண்டு காலாவதியாகும் ஷாம்பு , பவுடர் பாட்டில்கள் சோதனை செய்யப்பட்டன.

நடந்து முடிந்த சோதனையின் முடிவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிப்புகளில் தீங்கு விளைவிக்கும் ஃபார்மால்டிஹைட் வேதிப் பொருட்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஃபார்மால்டிஹைட் 38 முதல் 45% நீர்த்த கரைசல்லாக ஃபார்மலின் என்ற பெயாில் கிடைக்கிறது. இதில் பார்மிக் அமிலம் மாசுப்பொருளாகக் கலந்துள்ளது. தாவர உறுப்புகளின் உள்ளமைப்பினை அறிந்துகொள்ள நடைமுறையில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் நிலைநிறுத்தி இதுதான். மேலும் இது கட்டுமான பணிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த சோதனை குறித்து ராஜஸ்தான் மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகாரி ராஜா ராம் ஷர்மா கூறியதாவது:-

ஜான்சன் அண்ட் ஜான்சன் நோ டியர்ஸ் பேபி ஷாம்புவினை சோதனைக்கு உட்படுத்தியபோது, அதிக அளவில் நச்சு வேதிப்பொருளான ஃபார்மால்டிஹைட் கலந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது புற்றுநோயை உண்டாக்கக்கூடியது.

ஆனால், அந்நிறுவனம் எவ்வித நச்சும் கலக்கப்படவில்லை என கூறி வருகிறது. இந்த பரிசோதனையில் நச்சின் அளவு குறித்து சொல்ல முடியாது. தரப்பரிசோதனையில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் தோல்வியடைந்ததையடுத்து, இதர சோதனைகளுக்காக தற்போது மத்திய மருந்துகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில் அமெரிக்காவில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பவுடர் தொடர்ந்து பயன்படுத்தி புற்றுநோயால் தாங்கள் பாதிக்கப்பட்டதாக, பல நூறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது பேபி ஷாம்புவிலும் புற்றுநோய் உருவாக்கும் வேதிப் பொருட்கள் இருப்பதாக ஆய்வு முடிவு வந்திருப்பது மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!