பிரதமர் மோடியை ஏன் கட்டிப் பிடித்தேன் தெரியுமா..?


”நான் பிரதமரிடமிருந்துதான் அரசியல் கற்றுக் கொண்டேன். அவருக்கு அன்பை கற்றுக் கொடுக்க விரும்பினேன். அவரிடம் எனக்கு அன்பு இருந்தது. அதை வெளிப்படுத்த அவரை கட்டிப் பிடித்தேன்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கூறினார்.

தமிழகத்தில் கன்னியாகுமரியில் நடக்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை வந்துள்ளார். காலை சென்னை வந்த ராகுல் காந்தி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளிடம் கலந்துரையாடினார். மாணவிகள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது ஒரு மாணவி கட்டி அணைத்து அன்பை பரிமாறுவது தொடர்பாக கேள்வி எழுப்பினார். பதில் அளித்த ராகுல், “நான் பிரதமரிடமிருந்துதான் அரசியல் கற்றுக் கொண்டேன். அவருக்கு அன்பை கற்றுக் கொடுக்க விரும்பினேன். அவரிடம் எனக்கு அன்பு இருந்தது. அதை வெளிப்படுத்த அவரை கட்டிப் பிடித்தேன். மக்களவையில் பேசிய போது என் தந்தை, என் தாய் மற்றும் என்னை வெறுத்துப் பேசி வந்தார். ஆனால், நான் அவர் மீது அன்பு வைத்து இருந்தேன்.

அவருக்கு அன்பை காட்ட வேண்டும் என்று கருதினேன். உலகம் அன்புக்கு கட்டுப்பட்டது என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் அவரை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தினேன். அன்பை செலுத்துவதே மதங்களின் அடிப்படை. அதை அவருக்கு உணர்த்த வேண்டும் என்று முடிவு செய்தேன். கோபத்தை அன்பின் மூலம் அடக்குவது எனது குணம்” என்றார்.-Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!