மத்திய தரைக்கடலில் இறந்து மிதந்த 26 இளம்பெண்கள்… நடந்தது என்ன?


மத்திய தரைக்கடலில் 26 இளம்பெண்கள் இறந்து கிடந்தது தொடர்பாக இத்தாலி அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியா, லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகள் சென்றவண்ணம் உள்ளனர்.

இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக ஆபத்தான படகுப் பயணம் மேற்கொள்ளும்போது சில சமயங்களில் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் மத்திய தரைக்கடலில் இத்தாலி அதிகாரிகள் மேற்கொண்ட மீட்பு பணியின்போது, 22 இளம் பெண்களின் உடல்களை மீட்டுள்ளனர்.


14 முதல் 18 வயது வரை கொண்ட அந்தப் பெண்கள் நைஜர் மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், லிபியா வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல இந்த ஆபத்தான பாதையில் பயணித்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

படகு மூழ்கியதால் அவர்கள் இறந்திருக்கலாம் என்று பொதுவாக கூறப்பட்டாலும், அவர்கள் சாவுக்கான உண்மையான காரணம் தெரியவில்லை. இறந்துபோன இளம்பெண்களின் உடல்கள் இன்று பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விசாரணையும் தொடங்கி உள்ளது.

இதுபற்றி காவல்துறையின் மூத்த அதிகாரி லோரனா சிகோட்டி கூறும்போது, ‘இளம்பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இது குறித்து விசாரணை நடத்தப்படும். ஆட்கடத்தல் தொடர்பாக எகிப்து மற்றும் லிபியாவைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!