வளசரவாக்கத்தில் பிள்ளைகளை கொன்று உயிரை மாய்த்த தாயின் உருக்கமான கடிதம்..!


சென்னை வளசரவாக்கம் அடுத்த ராயலா நகர், 1-வது மெயின்ரோடு 1-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் செந்தாமரை (வயது 42). இவர், அரும்பாக்கத்தில் கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இவருடைய மனைவி அபிதா (29). இவர்களுக்கு லட்சுமி நாராயணன் (10) என்ற மகனும், மகாலட்சுமி (7) என்ற மகளும் இருந்தனர். லட்சுமி நாராயணன் 5-ம் வகுப்பும், மகாலட்சுமி 1-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் செந்தாமரை கடைக்கு சென்று விட்டார். மதியம் தனது மனைவிக்கு போன் செய்தார். ஆனால் அபிதா போனை எடுக்கவில்லை. இதற்கிடையில் வெளிநாட்டில் உள்ள அபிதாவின் தாயாரும் அவரை தொடர்பு கொண்டபோது அவர் செல்போனை எடுக்கவில்லை. இதுகுறித்து அவர் செந்தாமரையிடம் தெரிவித்தார்.

இதையடுத்து இரவில் செந்தாமரை, கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. நீண்டநேரம் தட்டிப்பார்த்தும் அபிதா கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது மனைவி, மகன் மற்றும் மகள் ஆகிய 3 பேரும் தனித்தனியாக தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு ராயலா நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதமன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று தூக்கில் தொங்கிய 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

செந்தாமரை தனது குடும்பத்துடன் கடந்த சில வருடங்களாக வளசரவாக்கம் குறிஞ்சி நகரில் குடியிருந்து வந்தார். அங்கிருந்து சில வாரங்களுக்கு முன்புதான் இந்த வீட்டில் வாடகைக்கு குடியேறினார்.

அபிதா மீது செந்தாமரை சந்தேகப்பட்டு வந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. தனது பிள்ளைகளையும் செந்தாமரை சரியாக கவனிக்கவில்லை என்றும் தெரிகிறது.

இதனால் மனம் உடைந்த அபிதா, தனது பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி கணவர் வேலைக்கு சென்ற பிறகு நேற்று முன்தினம் மதியம் அபிதா தனது மகன் மற்றும் மகளை ஒருவர் பின் ஒருவராக தூக்கில் போட்டு கொன்றுவிட்டு, அவரும் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

முன்னதாக அபிதா, தனது கணவர் செந்தாமரைக்கு எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில் அவர், “எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நாங்கள் இல்லாமல் நீங்கள் யாரை திட்டுவீர்கள். நாங்கள் இல்லாமல் நீங்கள் தனிமையில் இருந்தால்தான் எங்களின் அருமை உங்களுக்கு தெரியும். உங்கள் தம்பியையும், அவரது மனைவியையும் நம்பாதீர்கள்” என்று எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் நடத்தையில் கணவர் சந்தேகப்பட்டதால் ஏற்பட்ட தகராறில் தனது மகன், மகளை கொன்றுவிட்டு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக காலையில் கணவன் மனைவியிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது தான் வீட்டில் இல்லாத நேரத்தில் யாரை வரவழைத்து படுக்கிறாய்? என்று கணவன் செந்தாமரை கேட்டதாக சொல்லப்படுகிறது.

பெற்ற குழந்தைகள் முன்னிலையில் கணவன் இப்படி கேட்டதால் மனம் உடைந்த மனைவி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!