முதல் வருட திருமண நாளைக் கொண்டாட காத்திருந்த மனைவி – இறுதிச் சடங்கில் நடந்த சோகம்..!


பிப்ரவரி 14 , 2019 இந்தத் தேதியை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் 44 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதல், ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத ஒரு தாக்குதல் தற்போது நடைபெற்றுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்தத் தாக்குதலுக்காக இந்திய மக்கள் வருந்திக்கொண்டிருக்கும் வேளையில், நேற்று அதிகாலை அதே புல்வாமா பகுதியில் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில், ஒரு மேஜர் உட்பட நான்கு வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதில், சிஆர்பிஎஃப் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.

துப்பாக்கிச் சண்டையில் இறந்த மேஜர் வி.எஸ். தவுண்டியால் குறித்துப் பேசிய அவரது நண்பர் மாயங் கந்தூரி, ‘ நானும் தவுண்டியாலும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். அவர், 2011-ம் ஆண்டுதான் ராணுவத்தில் இணைந்தார். அவரது வீட்டில் தவுண்டியால் தான் கடைசி மகன். மிகவும் அமைதியானவர், அன்பானவர், எளிமையானவர், யாரிடமும் சத்தமாகக்கூட பேசமாட்டார். அனைவரையும் மதிக்கத் தெரிந்தவர். கடந்த முறை தவுண்டியால் சொந்த ஊருக்கு வந்திருந்தபோது, இருவரும் பேசிக்கொள்ள எங்களுக்கு அதிக நேரம் கிடைக்கவில்லை. அப்போது அவன், மீண்டும் ஒரு முறை வரும்போது பேசலாம் எனக் கூறிவிட்டு சென்றான். ஆனால், இனி எங்களால் என்றுமே பேசமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

மேஜர் இறந்தது அவனது தாய்க்குத் தெரியாது. 60 வயதான அவருக்கு இதயத்தில் பிரச்னை உள்ளது. தவுண்டியாலின் இறப்பு பற்றி கூறினால் அவரின் உடல்நிலை பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் நாங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. அவன் இறந்த செய்தி, அவனது மனைவி நிகிதா கவுலுக்கு மட்டுமே தெரியும். கடந்த வருடம் ஏப்ரல் மாதம்தான் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. முதல் வருட திருமண நாளைக் கொண்டாட காத்திருந்த நிகிதாவுக்கு, இது சொல்ல முடியாத பேரிழப்பு. அவன் இறப்பதற்கான வயது இது இல்லை. தன் சிறு வயதில் இருந்தே ராணுவத்தில் இணைய வேண்டும் என அடிக்கடி கூறிவருவான். அவன் ஆசை போலவே ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காகவே தன் உயிரை விட்டுள்ளான்’ எனக் கூறினார்.

மேஜர் தவுண்டியாலின் உடல், நேற்று மாலை அவரது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு கொண்டுசெல்லப்பட்டு, இன்று காலை இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில், அவரது மனைவி நிகிதா கனத்த மனத்துடன் பங்கேற்றார். தன் கணவர் உடலுக்கு அருகில் நின்று நீண்ட நேரம் அவரையே பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு அவருக்கு முத்தமிட்டு, அருகில் சென்று அவருடன் பேசினார். இந்த காட்சிகள் சுற்றியிருந்தவர்களின் மனத்தை உருக்கும் விதமாக இருந்தது. மேலும், அவரின் செயல் வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகி அதிக கவனம் பெற்றுள்ளது.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!