உண்மையில் ஸ்ரீசாயி பாபாவுக்கு பிரியமானது இதுதானாம்..!


துன்பம், சோதனை போன்றவை ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதேனும் காலகட்டத்தில் ஏற்படவே செய்யும். அந்த காலகட்டத்திலும், பாபாவின் மீது திட நம்பிக்கை இருக்க வேண்டும். தன்னுடைய பக்திக்கு சோதனை காலம் என்றும், இந்த சோதனையில் இருந்து பாபா காப்பாற்றுவார் என்றும் நம்பவேண்டுமே தவிர, சாயி ஏன் இப்படிப்பட்ட சோதனை தந்தார், அவர் உண்மையில் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துவிடவே கூடாது.

அதனால்தான் தன்னுடைய பக்தர்களிடம் பாபா இரண்டே இரண்டு மட்டும்தான் எதிர்பார்க்கிறார். அவை, சிரத்தா எனப்படும் நம்பிக்கையும், சபூரி என்ற பொறுமையும்தான்.


இந்த நம்பிக்கையும் பொறுமையும்தான் இந்த வாழ்க்கைப் பெருங்கடலை கடப்பதற்கு துணையாக நிற்கும். அசைக்க முடியாத நம்பிக்கையானது, அனைத்து பாவங்களையும், துன்பங்களையும், வாழ்க்கை இடர்ப்பாடுகளையும் விரட்டியடித்துவிடும்.

நம்பிக்கை என்பது முழுமையானதாக, ஒப்பீட்டுக்கு அப்பாற்பட்டதாக, அளவு இல்லாததாக இருக்கவேண்டும் என்கிறார் சாயிநாதர். அதே போன்று பொறுமை என்பது நமக்கு நாமே உருவாக்கிக்கொள்ளும் மனோதிடம். ஒரு கதவு திறக்கவில்லை என்றதும் பொறுமை இழந்துவிடக் கூடாது. நமக்காக பாபா வேறு ஒரு கதவைத் திறப்பார் என்று பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். கேள்வி, சந்தேகம், புகார் இல்லாமல் பாபாவை பூரணமாக சரண் அடைந்துவிட்டால், பாபாவின் இதழ்களில் வழியும் புன்னகையின் மகிமையை வாழ்விலும் தரிசிக்க முடியும்.- Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.