மின்கம்பத்தை தொட்டதும் 5 நிமிடம் அசைவற்று நின்ற சிறுவன்: நெஞ்சை உலுக்கும் காட்சி

ஹைதாரபாத்தில் உள்ள நர்சிங்கி பகுதியில் சிறுவன் ஒருவன் வழக்கபோல விளையாடிக்கொண்டிருக்கிறான். மக்கள் நடமாட்டம் நிறைந்த அப்பகுதியில் சிறுவனுக்கு அருகில் மற்ற சிறுவர்களும் விளையாடிக்கொண்டிருகின்றனர். அங்கு ஓடி வந்த சிறுவன், அருகிலிருக்கும் மின் விளக்குக் கம்பத்தை விளையாட்டாகத் தொடுகிறான். தொட்டவுடன் அப்படியே அசைவற்று சிறுவன் நிற்கும் காட்சிகள், காண்போரை உலுக்கச் செய்யும் வகையில் உள்ளது. கம்பத்தைப் பிடித்த சில நிமிடங்கள், உடலில் எந்தவித அசைவும் இல்லை. அப்படியே நிற்கிறான். ஒரு கையை மட்டும் கம்பத்தில் பிடித்தபடி நின்றுகொண்டிருக்கிறான்.

அருகிலிருந்தவர்கள் சிறுவனைக் கடந்துசெல்கின்றனர். சில நிமிடங்களுக்குப் பிறகு, கம்பத்திலிருந்து சிறுவனின் கை விடுபட, அப்படியே கீழே சரிந்து விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சிறுவன் சரிவதைக்கண்டு அருகிலிருப்பவர்கள் பதற்றத்துடன் வந்து பார்த்தபோது, அறுந்துவிழுந்த மின் வயரை தெரியாமல் காலில் மிதித்தது தெரியவந்தது. இதனால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலே 6 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளான். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் ராகவேந்திரா கூறுகையில், `சுமார் 4 முதல் 5 நிமிடங்கள் கம்பத்தைப் பிடித்துக்கொண்டிருந்த சிறுவன் பின் கிழே விழுந்துள்ளான். இதைப்பார்த்து அங்கு வந்த செக்யூரிட்டி, சிறுவனைத் தொட்டபோது அவருக்கும் சிறிய அளவில் ஷாக் அடித்துள்ளது.

உடனே அருகிலிருந்து மருத்துவமனைக்கு எடுத்து சென்றபோது, மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்’ என்றார். சிறுவனின் தந்தை சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்தச் சம்பவம் நடக்கும்போது அவர் சென்னையில் இருந்துள்ளார். சம்பவத்தை தெரிந்துகொண்ட அவர் பதறியடித்துக்கொண்டு ஹைதராபாத் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின் ஊழியர்களின் அலட்சியத்தின் காரணமாக இவ்வாறு நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. – Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.