சரக்கடித்து விட்டு உயிருள்ள மீனை விழுங்கிய இளைஞர்… கடைசில என்னாச்சு தெரியுமா?


மது, இன்றைய அன்றாட வாழ்க்கையில் மனிதர்களில் பெரும்பாலானோருக்குப் பழகிப் போய்விட்டது. மது அருந்திய சிலர் பாடல்கள் கேட்பர், சிலர் நடனமாடுவர். சிலர் திரைப்படங்களை ரசிப்பார்கள். சிலர் நொறுக்குத் தீனிகளை எடுத்துக் கொள்வர்.

ஆனால், நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டேம் (Rotterdam) என்ற நகரத்தில், இளைஞர்கள் குழு ஒன்று மது அருந்திவிட்டு டி.வி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மீனை விழுங்கும் நிகழ்வு நடந்தது.

அதைக் கண்ட இளைஞர்களில் ஒருவர் “பெரிய மீன், பெரிய மீன்” எனக் கத்திக்கொண்டே ஒரு டம்ளரில் கெளுத்தி மீனைப் பிடித்துக்கொண்டு கத்தினார். அந்தக் கூட்டத்தில் இருந்த மற்றோர் இளைஞன் அந்த டம்ளர் தண்ணீரைக் குடித்து 4 விநாடிகளில் துப்பி விடுகிறார். மீனையும் மேஜைமேல் போட்டு விடுகிறார்.

இந்நிகழ்வு அப்படியே நின்றிருந்தாலோ அல்லது மீனைத் தண்ணீரில் விட்டிருந்தாலோ ஏதும் பாதிப்பு நிகழ்ந்திருக்காது. அதன் பின்னர் நடந்த சம்பவம் ஓர் இளைஞரின் உயிரைப் பறிக்கும் அளவுக்குச் சென்றுவிட்டது. மேசைமேல் இருந்த மீனை மூன்றாவதாக ஒரு நபர் எடுத்து 28 வயது இளைஞர் ஒருவரின் கையில் வைத்து விழுங்கச் சொன்னார். முதலில் தயங்கிய இளைஞர், பீரை வாயில் ஊற்றி மீனை விழுங்கிவிட்டார்.

உடனடியாக தவறு நிகழ்ந்து விட்டதை உணர்ந்த இளைஞர், மேலும் பீரை விழுங்க முயன்றார். ஆனால், விழுங்க முடியவில்லை. 10 விநாடிகளில் கடுமையாக வாந்தி எடுக்க ஆரம்பித்தார். மிகுந்த துயரத்தில் அவதிப்பட்ட இளைஞர், தொண்டைக்குள் கையை விட்டு எடுக்க முயற்சி செய்தார். ஆனால் தொண்டை வலிக்க ஆரம்பித்தது. பின்னர் முதலுதவி என்கிற பெயரில் நண்பர்கள் அந்த இளைஞரை தலைகீழாக கால்களைப் பிடித்து தொங்க விட்டிருக்கின்றனர்.

ஆனால், இளைஞர் தலைகீழாகத் தொங்கும்போது மீன் மேல் நோக்கி உள்ளே சென்றிருக்கிறது. மீனை எடுக்கப் பல மணிநேரம் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தார், அந்த இளைஞர். பீர், தேன் மற்றும் ஐஸ்கிரீம் எனப் பலவற்றையும் சாப்பிட்டு முயற்சி செய்து பார்த்தார். ஒரு கட்டத்தில் நிலை கை மீறிப்போய், ரத்தமாக வாந்தி வெளியேறவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்னர் பல மணிநேரங்கள் முயற்சி செய்து பார்த்திருக்கிறார், அந்த `போதை’ இளைஞர்.


மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் அவரது தொண்டையில் லாரிங்கோஸ்கோப் (laryngoscope) கருவியை வைத்துப் பரிசோதித்திருக்கிறார்கள், மருத்துவர்கள். அப்போது மீன் போன்ற உருவம் தென்பட்டிருக்கிறது. அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்தனர். அந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துக் கொண்டார். அவர் இப்போது வழக்கமாக வேலைகளைக் கவனித்து வருகிறார்.

அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் லிண்டா பெனோயிஸ்ட் (Linda Benoist), “நான் சந்தித்த விசித்திரமான நோயாளிகளில் இவரும் ஒருவர். மருத்துவமனையில் நோயாளி சேர்க்கப்படுவதற்கு முன்னரே உடலுக்குள் இருந்த மீன் இறந்திருந்தது. மீனை விழுங்கிய பின்னர், இளைஞர் பீரை விழுங்கியதால் தண்ணீர் இல்லாமல் மீன் இறந்திருக்கலாம். மீன் நுரையீரலுக்குள் போய் விட்டது. அதனால் கவனமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டோம். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துக் கொண்டார். அறுவை சிகிச்சை மூலம் எடுத்த மீனை பக்கத்தில் இருக்கும் அருங்காட்சியகத்தில் கொடுத்துவிட்டோம். இப்போது உயிரற்ற அந்த மீன் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.” என்கிறார்.

ரோட்டர்டேம் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகத்தின் (Rotterdam Natural History Museum) இயக்குநரான கீஸ் மோலிகெர் (Kees Moeliker), “பெரும்பாலான விலங்குகள் கெளுத்தி மீனைச் சாப்பிடாது. கெளுத்தி மீன்கள் பொதுவாக 2 முதல் 3 அங்குல நீளம் (5 முதல் 8 செ.மீ) வரை, பார்க்க அழகாக இருக்கும். நீந்தப்பயன்படும் துடுப்புகள் கூர்மையான முட்கள் கொண்டு அமைந்திருக்கின்றன. இதை எந்த மீனும், பறவையும் எளிதில் வேட்டையாடாது. இதனை உண்ண நினைத்தால் மரணம் நேரிடும் வாய்ப்புகள் அதிகமாகும்” என்கிறார்.

நெதர்லாந்தில் இந்த வகையான மீன்களை உயிருடன் உண்ணும் முயற்சிகள் அடிக்கடி நடப்பதால் ஆராய்ச்சியாளர்கள் உயிருடன் இருக்கும் மீன்களைத் தவிர்த்து, சமைத்த மீன்களை உண்ணுமாறு அறிவுறுத்தியிருக்கின்றனர்.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!