15 வயது சிறுமி எலும்புக்கூடாக கண்டெடுப்பு.. கற்பழித்து கொலையா..?


ஐந்து மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன 15 வயது சிறுமி, கரும்புத்தோட்டத்தில் புதைக்கப்பட்ட நிலையில் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த 15 வயதான சிறுமி, கடந்தாண்டு செப்டம்பர் 7ம் தேதி பள்ளிக்கு சென்றுவிட்டு அன்று மாலை வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமுற்ற அவரது பெற்றோர் பொதட்டூர்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுதொடர்பான விசாரணை கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் கீச்சலம் கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் மனித எலும்புத் துண்டுகள் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை, புகார் கூறப்பட்ட இடத்தில் கிடந்த புத்தகப்பை, சீருடை, தலைமுடி ஆகியவற்றை சோதித்தனர். பிறகு சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி. பொன்னி, கடந்த செப்டம்பர் மாதம் காணாமல் போன சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்தனர்.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சேகரிக்கப்பட்ட பொருட்களை பார்த்தனர். பிறகு அவை தங்களுடைய மகள் பயன்படுத்திய பொருட்கள் தான் என்று கூறினர்.

இதுகுறித்து அரசு உயர் அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டு, எலும்புகளை ஆய்வுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறினர்.-Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!