அர்த்தாஷ்டமச் சனி நீங்குகிறது… சிம்ம ராசிக்காரர்களே இனி நிம்மதியாயிருப்பீர்கள்…!!


வருகிற டிசம்பர் 19 ஆம் தேதி சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம்பெயர்ந்து செல்கிறார்.

அதனால் 12 ராசிகளுக்கும் கிரக நிலைகள், நற்பயன்கள் ஆகியவை மாறும். அப்படி கிரக நிலைகள் மாறுவதில், இந்த சனிப்பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்.

சிம்ம ராசிக்கு இதுவரை கெடுபலன்களை தரக்கூடிய இடமான நான்காம் இடத்திலிருந்து வந்த சனிபகவான் ஐந்தாமிடத்திற்குச் செல்கிறார். இது உங்களுக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய ஒரு மாற்றமாக அமையும்.

சனிபகவான் ஐந்தாமிடத்தில் இருப்பது நல்ல நிலை என்று நம்முடைய மூல நூல்களில் சொல்லப் படாவிட்டாலும் கடந்த மூன்று ஆண்டு காலமாக உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் அமர்ந்து ஜீவன ஸ்தானத்தை பார்த்ததன் மூலம் சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புகளில் நிம்மதியற்ற சூழலை சனி கொடுத்துக் கொண்டிருந்தார்.


மேலும் தன்னுடைய கெடுதலான பார்வையின் மூலம் ராசியைப் பார்த்து சிம்மத்தினருக்கு மன நிம்மதி இல்லாத சூழல்களையும் உருவாக்கி இருந்தார். இதுபோன்ற நிலையில் இருந்து சனி நீங்குவது சிம்மத்திற்கு பெரிய நன்மைகளைத் தரும் என்பதால் இந்த சனிப் பெயர்ச்சியால் நன்மைகளை அடையப் போகும் ராசிகளில் சிம்மமும் ஒன்றாக இருக்கும்.

குறிப்பாக சிம்ம ராசிக்காரர்களின் உடல், மனம் இரண்டையும் பாதித்து கெடுபலன்களைத் தந்து கொண்டிருந்த சனி அர்த்தாஷ்டமச் சனி எனும் நிலையில் இருந்து மாறுவதே சிம்மத்திற்கு ஒரு மிகப் பெரிய நிம்மதியை தருகின்ற ஒரு நிலை.

வேறு சிலருக்கு வேலையில் மன அழுத்தம் தரக் கூடிய டார்ச்சர் எனப்படும் நிலைமைகள் இருந்ததோடு, சொந்த வாழ்விலும் மன இறுக்கம் தரக்கூடிய சூழல்கள் இருந்தன. கணவன்-மனைவி கருத்து வேறுபாடு, குடும்பத்தில் மூன்றாம் மனிதரின் தலையீட்டினால் குழப்பம், பொருளாதாரச் சிக்கலினால் சண்டை, குழந்தைகளால் மனவேதனை போன்ற அனைத்து வித குழப்பங்களும் ராசிக்கு இருக்கும் சனியின் பார்வை விலகுவதால் தீரப் போகிறது.

சமீபகாலங்களில் இரண்டு பெரும் பாவ கிரகங்களில் ஒன்றான ராகு உங்கள் ராசியிலேயே அமர்ந்திருந்ததும், அந்த ராகுவை இன்னொரு பெரும் பாவராசியான சனி பார்த்ததும் சிம்ம ராசிக்காரர்களின் மனம், உடல் இரண்டையும் பாதித்திருந்தன. பெரும்பாலான சிம்மத்தினருக்கு உடல்நலம் பாதித்தது இந்த அமைப்பால்தான்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

முன்னரே நடந்த ஒரு நல்ல நிகழ்ச்சியாக இரு மாதங்களுக்கு முன்பு ராகு பகவான் உங்கள் ராசியில் இருந்து விலகி விட்டதும், தற்போது சனி மாற்றத்தினால் சனியின் பார்வையும் உங்கள் ராசியில் இருந்து விலகுவதும், ஒளி மிகுந்த ராசியான சிம்மத்தை மீண்டும் ஒளி வீசச் செய்யும் அமைப்புகள் என்பதால் உங்கள் உடலும், மனமும் இனி சீராகும்.

இந்தப் பெயர்ச்சியின் மூலம் இதுவரை தன்னம்பிக்கை இழந்து, தாழ்வு மனப்பான்மையில் இருந்த சிம்மத்தினர் மீண்டும் இழந்த நம்பிக்கையைப் பெற்று வாழ்க்கையில் அனைத்தையும் சந்திக்கத் துணியும் செயல்திறனுடன், புத்துணர்ச்சியோடு வலம் வர தொடங்குவீர்கள். எனவே கெடுபலன்கள் நீங்கப் போகின்றது என்ற வகையில் இந்த பெயர்ச்சி ஒரு மகத்தான மாற்றத்தை சொந்த வாழ்க்கையிலும், தொழில் அமைப்புகளிலும் உங்களுக்குக் கொடுத்து வாழ்வில் முன்னேற்றத்தினை தர இருக்கிறது.


அதேநேரத்தில் ஐந்தாமிடத்தில் அமரும் சனி என்ன பலன்களைத் தருவார் என்று பார்க்கும்போது பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்களையும், குழந்தைகள் மூலமான நம்முடைய எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போவதையும், பிள்ளைகளுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய இயலாமல் போவதுமான பலன்களைச் செய்வார்.

எனவே இந்த சனி மாற்றத்தால் பருவ வயது குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவர்களுடைய படிப்பு, வேலை போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம். பிள்ளைகள் தங்களுடைய வயதிற்குரிய விஷயங்களைச் செய்து உங்களுக்கு மன வருத்தத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் பள்ளியிறுதி-கல்லூரி வயதில் இருக்கும் குழந்தைகளை அக்கறையுடன் கவனித்து கொள்ள வேண்டியது அவசியம்.

இதுவரை வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு நல்லவேலை கிடைக்கும். இருக்கும் வேலையில் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் அனைத்தும் ஓய்ந்து நிம்மதி கிடைக்கப் பெறுவீர்கள். சனியின் பத்தாம் பார்வை தொழில் ஸ்தானத்தில் இருந்து விலகுவதால் தொழில், வியாபாரம் போன்றவைகள் இனிமேல் சூடுபிடித்து நாளுக்கு நாள் விருத்தி அடையும். இதுவரை இருந்து வந்த விரையங்கள் இனிமேல் இருக்காது. சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க முடியும். எதிரிகள் ஒழிவார்கள். போட்டிகள் விலகும்.

சனியின் பார்வை ராசியில் இருந்தும் விலகுவதால் இதுவரை தாழ்வு மனப்பான்மையில் இருந்தவர்கள் அது விலகப் பெறுவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் குறைந்து நல்லவைகளை சிந்திக்கவும், செயல்படுத்தவும் ஆரம்பிப்பீர்கள். மனஅழுத்தம் நீங்கி புத்துணர்ச்சி வரும். எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கை பிறக்கும். அதற்கு உறுதுணையாக இருக்கக்கூடிய ஆட்களைச் சந்திப்பீர்கள்.


மொத்தத்தில் அர்த்தாஷ்டமச் சனி என்ற பெயரில் கடந்த மூன்று வருடங்களாக உங்களை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டிருந்த சனிபகவான் விலகுவதால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெற்று எதிர்காலத்தை உங்களுடையதாக்கி கொள்வீர்கள்.

சனிபகவான் ஐந்தாமிடத்திற்கு மாறுவதால் குடும்பத்தில் மகன், மகளுக்கு ஆகவேண்டிய திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு தடைகளை ஏற்படுத்துவார். பிள்ளைகளுக்கும், பெற்றவர்களுக்கும் தலைமுறை இடைவெளி வரும். நீங்கள் உங்கள் தகப்பனாரிடம் வாழ்ந்த காலம் வேறு. தற்போதைய இளைஞர்களின் காலம் வேறு என்பதை உணர்ந்து கொண்டால் இந்த ஐந்தாமிட சனியை சுலபமாக சமாளித்து விடுவீர்கள்.

இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் கொஞ்சம் குறையும். சாதாரண சிறு விஷயங்களுக்குக் கூட மிகப் பெரிய முயற்சிகள் தேவைப்படும். எனவே எந்த ஒரு விஷயத்தையும் அசட்டையாகவும் கவனக்குறையாகவோ எடுத்துக் கொள்ளாமல் முழு கவனத்துடன் செய்ய வேண்டி இருக்கும்.

என்னதான் சனி ஐந்தாமிடத்தில் இருந்தாலும் பணவரவுக்கு குறை இருக்காது. வருமானம் தடைப்படாது. சனி எந்த ஒரு விஷயத்திலும் சிறு பிரச்சினைகளையும், சிக்கல்களையும் தருவாரே தவிர பண விஷயங்களில் கைவைக்கமாட்டார். அதே நேரத்தில் சேமிக்கவும் முடியாது என்பதால் எந்த ஒரு செலவு செய்யும் முன்பும் யோசித்து செய்வதும், சிக்கனமாக இருப்பதும் நல்லது.


கடந்த காலங்களில் சுக ஸ்தானமான நான்காமிடத்தில் சனி இருந்ததால் ஆரோக்கியக் குறைவையும், உடல்நலப் பிரச்சினைகளையும் சந்தித்தவர்கள் சீக்கிரமாக குணமடைவீர்கள். மருத்துவர்களுக்கு அடங்காத நோய்களும் இப்போது பரம்பொருளின் கருணையால் வெகு விரைவில் குணமாகும். இதுவரை மருத்துவத்துக்கென ஒரு தொகையை ஒதுக்கி வைத்தது விலகி இனிமேல் அப்படி செய்ய வேண்டியது இருக்காது.

பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவி உயர்வு, கூடுதல் சம்பளம் போன்ற நல்லபலன்கள் இருக்கும். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் இப்போது நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சகோதரர்கள் உதவுவார்கள். குடும்பத்தில் சொத்துச் சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல் போன்றவை இருக்கும். மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.

மத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.


சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. நகரங்களில் இருப்பவர்கள் அருமையான ஒரு பிளாட் வாங்குவீர்கள். இதுவரை வாங்க முடியாத விரும்பிய வாகனம் வாங்க முடியும். தாயாருக்கு உடல்நலக் குறைவு சரியாகும். அம்மாவைப் பற்றிக் கவலைப் பட அவசியம் இருக்காது.

பொதுவாக சிம்ம ராசிக்கு இது எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் காலகட்டமாக அமையும். இப்போது ஏற்படும் நன்மைகளால் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள்.

பரிகாரங்கள்

ஒரு கருப்பு நிறமுள்ள மனிதரை மேற்குமுகமாக நிறுத்தி வைத்து நீங்கள் அவருக்கு எதிரில் கிழக்கு பார்த்து நின்று ஒரு இரும்புச் சட்டியில் வழிய வழிய நல்லெண்ணெய் ஊற்றி ஒரு சனிக்கிழமை இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் அல்லது உங்களின் ஜென்ம நட்சத்திர நாளன்று இரவில் சனி ஹோரையில் தானம் கொடுப்பது சனிபகவானை திருப்திப்படுத்தும். தானம் பெறுபவர் துப்புரவுத் தொழிலாளியாக இருந்தால் சிறப்பு.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!