சீரடி சாயி பாபா அருள் பெறுவதற்கு எளிதான வழி இதுதாங்க..!


ஸ்ரீசாயி பாபா இந்த பூவுலகில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். தன்னை நம்பி வருபவரை, ஸ்ரீசாயி 24 மணி நேரமும் ஞானக்கண்ணால் பார்த்துக்கொண்டு இருக்கிறார். பாபாவின் பார்வையிலிருக்கும் பக்தர்களை, எந்த ஒரு சக்தியாலும் விலக்கிவிட முடியாது என்ற உண்மையை உலக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர் அருள் பெற எளிய வழி இதுதான்…

ஸ்ரீசாயி பாபாவை நம்பினோர்க்கு ஆனந்த அனுபவம் கிடைக்கிறது. வாழ்நாள் முழுவதும் நம்பிக்கை கிடைக்கிறது. அவரது வாழ்க்கையும், உபதேசங்களும் மனிதர்களின் கவலை தீர்க்கும் மாமருந்து. சாய் பாபாவின் போதனைகள் எத்தனை எளிதானதோ, அதே போல் அவருடைய அருள் பெறுவதும் மிகமிக எளிது.

துன்பம், துயரம், கவலை, சோகம் என்று நாடி வருபவர்களுக்கு பாபா சொல்வது இதுதான். ‘’கவலைப்படாதீர்கள்… நீங்கள் என் குழந்தைகள். உங்களை வழிநடத்த நான் இருக்கும்போது, நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? உங்கள் கடந்தகால கர்மவினைகளின் எதிர்மறைத் தாக்குதல்கள் அனைத்தையும் நான் துடைத்தெறிந்துவிடுகிறேன். உங்கள் எதிர்காலம் துன்பத்தில் ஆழ்ந்துவிட நான் அனுமதிப்பேனா? நிச்சயம் மாட்டேன்.


உங்கள் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மாற்றுவேன் என்று நான் உறுதியளிக்கிறேன். ஆனால், உங்கள் உதவியின்றி உங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கு என்னால் எதுவும் செய்ய முடியாது. ஆம், நீங்கள் செய்யவேண்டியவை இவைதான்… கீழ்கண்டவற்றை உங்கள் மனப்பூர்வமாக செய்யவேண்டும்.

நல்லதை சிந்தியுங்கள்… · நல்ல செயல்களை செய்யுங்கள் · பசித்திருப்பவருக்கு உணவிடுங்கள் · வஸ்திரமில்லாதவருக்கு ஆடை அளியுங்கள் இந்த செயல்களை மட்டும் நீங்கள் மனப்பூர்வமாக செய்தால் போதும், மற்றவற்றை நான் கவனித்துக்கொள்கிறேன். உங்களிடம் செல்வம் இருந்தால் எவ்வளவு முடியுமோ அவ்வளவைக் கொண்டு, எத்தனை இயலுமோ அத்தனை பேருக்கு உணவளியுங்கள். நீங்கள் ஏழ்மையில் இருந்தாலும் கவலைப்படாதீர்கள், உங்களிடமுள்ள எளிய உணவை பசித்தவருடன் சிறிதளவு பகிர்ந்துகொள்ளுங்கள்.


பகிர்ந்து அளியுங்கள்

அன்புடன் சிறு கவளம் உணவு பகிர்ந்துகொடுப்பதே போதும். ஏனென்றால் நல்லெண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் சிறிய செயல்களுக்குக்கூட, அற்புதம் நிகழ்த்தும் சக்தியுண்டு. இந்த சிறிய செயல்களுக்கு, உங்கள் கர்மவினைகளின் எண்ணிலடங்கா எதிர்மறைத் தன்மைகளை நீக்கி, உங்கள் பாத்திரங்களை அபரிமிதமான உணவாலும், உங்கள் இல்லத்தை மகிழ்ச்சியாலும் நிறைத்துவிடும் சக்தி உண்டு’’ என்கிறார் பாபா.

பாபாவின் வாய்மொழி உத்தரவை கடைப்படிக்கும் வகையில், ’கொடுங்கள், பகிர்ந்துகொள்ளுங்கள், அக்கறையுடன் செயல்படுங்கள், அன்புடன் அள்ளிக்கொடுங்கள். உங்கள் வாழ்வில் ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியான அற்புதங்கள் நிகழ்வதைக் காணமுடியும்’.

நாம் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்குத்தான் பாபா எத்தனை எளிய வழிகாட்டியாகத் திகழ்கிறார்… இந்த எளிமையும் உண்மையும்தான் பாபா. பாபாவின் சொற்கள் எளிமையானவை, பாபாவின் சொற்கள் வலிமையானவை. பாபாவின் சொற்கள் மந்திரசக்தி வாய்ந்தவை. பாபாவின் சொற்கள் உள்ளத்தை கொள்ளையிடுபவை.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!