உயிருக்கு உலைவைத்த ரூ.1000 பொங்கல் பரிசு… மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்..!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலையைச் சேர்ந்தவர் ராமர் (வயது 70), இவரது மனைவி ராசாத்தி (65).

இவர்கள் இருவருக்கம் இடையே குடும்ப பிரச்சனை தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பணத்தை ராசாத்தி நேற்று வாங்கி வந்தார்.

அதில் பாதியை தனக்கு தர வேண்டும் என்று ராமர் கேட்டார். இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இன்று காலை எழுந்ததும் மீண்டும் அதே பிரச்சனை வெடித்தது. இதில் ஆத்திரம் அடைந்த ராமர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, மனைவியை வெட்டினார். பலத்த காயம் அடைந்த ராசாத்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

ஆத்திரத்தில் கொலை செய்து விட்டோமே என்று ராமர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் எழுமலை போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார்.

அப்போது மனைவியை வெட்டிக் கொலை செய்ததை தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ராசாத்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.