திடீரென நடுரோட்டில் தீப்பிடித்த பைக்… பதறிய கல்லூரி மாணவர்

சென்னை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதை ஓட்டி வந்த கல்லூரி மாணவர், சாலையில் பைக்கை போட்டுவிட்டு தப்பி ஓடினார்.

சென்னை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே பைக்கில் வாலிபர் ஒருவர் சென்றுகொண்டிருந்தார். திடீரென அவரின் பைக் தீப்பிடித்து எரிந்தது. இதனால், பைக்கை ஓட்டிய வாலிபர் பதறினார். அடுத்த சில நிமிடங்களில் பைக்கை சாலையிலேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். அதை, அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலர் பிரகாஷ் கவனித்தார். உடனே அவர், தைரியமாக பைக்கின் அருகே சென்றார். பிறகு தீயை அணைக்க சில முயற்சிகளைச் செய்தார். இருப்பினும் தீ அணையாமல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அதை வேடிக்கைப்பார்க்க அந்தப்பகுதியில் மக்கள் கூட்டம் கூடியது. அவர்கள், காவலர் பிரகாஷை பைக்கின் பக்கத்தில் செல்லாதீர்கள், பெட்ரோல் டேங்க் வெடித்துவிடும் என எச்சரித்தனர். பைக்கை ஓட்டிவந்த வாலிபரோ என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போய் நின்றார். தன் கண்முன்னாலேயே பைக் எரிந்துக் கொண்டிருந்ததை அதிர்ச்சியோடு அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.

இந்தச்சமயத்தில் காவலர் பிரகாஷ், தீயணைப்பு கருவி பக்கத்தில் எதாவது கடையில் இருக்கிறதா என்று விசாரித்தார். அப்போது ஒருகடையில் இருந்த தீயணைப்புக் கருவி இருப்பது தெரியவந்தது. உடனே அங்கு சென்று தீயணைப்புக் கருவியை வாங்கிவந்த காவலர் பிரகாஷ், தீப்பிடித்த பைக் மீது அடித்தார். இதனால் தீ அணைந்தது. இருப்பினும் பைக்கின் முன்பகுதி முற்றிலும் எரிந்து எலும்புகூடானது.

இதையடுத்து அந்தப்பைக்கை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன்பிறகு போக்குவரத்து அந்தப்பகுதியில் சீரானது. நடுரோட்டில் பைக் எரிந்ததை துணிச்சலுடன் அணைத்த காவலர் பிரகாஷ், ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன் அந்தப்பகுதியில் காரின் தீயை அனைத்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பைக்கை ஓட்டியவரின் பெயர் சுபாஷ் என்றும் கல்லூரி மாணவர் என்றும் தெரியவந்தது. பைக்கின் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். சுபாஷ், வேளச்சேரியிலிருந்து செம்மஞ்சேரியில் உள்ள கல்லூரிக்கு பைக்கில் இன்று செல்லும்போதுதான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. – Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.