போயஸ் கார்டனில் ஹரிணி பாப்பாவை சந்திக்கிறார் லதா ரஜினிகாந்த்..!


ஹரிணி பாப்பாவை பார்க்க லதா ரஜினிகாந்த் ஆவலாக இருக்கிறாராம்… இதற்கான சந்திப்பு இன்று நடக்கும் என்றுகூட தெரிகிறது.

நரிக்குறவர் குடும்பத்தை சேர்ந்த தம்பதியின் 2 வயது மகள் ஹரிணி 3 மாதத்துக்கு முன்பு காணாமல் போய்விட்டாள். இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

ஹரிணியின் மழலை முகத்தில் தங்களை மறந்த தமிழக மக்களும் அவளை தேடும் முயற்சியில் ஆர்வமாக இறங்கினார்கள்.

இதற்காக சொந்தமாகவே செலவு செய்து ஹரிணி போட்டோவை போஸ்டர் அடித்து ஒட்டி, கண்டுபிடித்து தந்தால் சன்மானம் என்றுகூட விளம்பரம் செய்தார்கள். இணையதளத்திலும் ஏராளமான தன்னார்வ அமைப்புகள், சமூக நிறுவனங்கள் தானாக முன்வந்து ஹரிணியை கண்டுபிடிக்க உதவி செய்தன.

இதேபோலதான் லதா ரஜினிகாந்தும் உதவி செய்ய முன்வந்தார். இவர் குழந்தைகள் நலனுக்கான ‘தயா பவுண்டேசன்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். சமீபத்தில்கூட இது சம்பந்தமான விழா திருவான்மியூரில் நடைபெற்றபோது, ரஜினிகாந்த் இதில் கலந்து கொண்டு பேசினார்.


அப்போது, “நிறைய குழந்தைகள் காணாமல் போகின்றன, அவர்களை கடத்தி கொண்டு போய் பிச்சை எடுக்க வைத்துவிடுகிறார்கள், குழந்தை கடத்தல் தொடர்பாக மத்திய – மாநில அரசுகள் சரியாக செயல்படவில்லை” என்று தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.

இந்த நிலையில்தான், சில தினங்களுக்கு முன்பு, லதா ரஜினிகாந்த், ஹரிணியின் அம்மா காளியம்மாளை போனில் கூப்பிட்டு பேசினார். தான் நடத்தி வரும் குழந்தைகள் அமைப்பு மூலம் ஹரிணியை தேடி வருகிறோம் என்றும், மும்பையில் ஹரிணி போலவே ஒரு குழந்தை இருப்பதாக தகவல் வந்திருக்கிறது, அதனால் கவலைப்படாமல் இருங்கள், விரைவில் குழந்தையை மீட்கலாம் என்று தைரியம் சொன்னார்.

ஆனால் மும்பையில் ஹரிணி கிடைக்கவில்லை, மாறாக திருப்போரூரிலேயே தகவல் வந்ததால், அங்கு சென்று சிறுமியை நேற்று போலீசார் மீட்டனர். இப்போது, ஹரிணி பாப்பாவை நேரில் சந்திக்க லதா விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதற்காக ஹரிணி மற்றும் அவரது பெற்றோர் வெங்கடேசன், காளியம்மாள் தம்பதியரை லதா ரஜினிகாந்த நேரில் அழைத்துள்ளார். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் இல்லத்தில்தான் இந்த சந்திப்பு நடைபெறும் என்று தெரிகிறது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!