காதல் திருமணம் செய்த வாலிபர் மர்மமாக மரணம்.. ஆணவக் கொலையா..?


பெண்ணாடம் இறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி மகன் பரந்தாமன்(வயது 25). பி.எஸ்சி. பட்டதாரியான இவர், கேரளாவில் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் மதுரை மாவட்டம் முத்தையன் பட்டி பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பையும் மீறி பரந்தாமன், அந்த இளம்பெண்ணை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் 18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்ததாக பரந்தாமன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு மதுரை கிளை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இதையடுத்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த பரந்தாமன், கடந்த 3-ந்தேதி வரை மதுரையில் தங்கியிருந்து சிந்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி பரந்தாமன், மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள தங்கும் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு அங்குள்ள போலீசாரிடம் இருந்து தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், 3-ந் தேதி சிந்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்ட பரந்தாமன், 4-ந் தேதி புனேவுக்கு சென்றது எப்படி?, அங்கு தற்கொலை செய்து கொண்டது எப்படி? என்பது புரியாத புதிராக உள்ளது.

பரந்தாமனின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை இளம்பெண்ணின் பெற்றார் மற்றும் உறவினர்கள் ஆணவ கொலை செய்ததாகவும் கூறி திட்டக்குடி-விருத்தாசலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் மற்றும் போலீசார், இதுகுறித்து புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து இளம்பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் மீது பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதனிடையே நேற்று முன்தினம் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில் பரந்தாமனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காலையில் திட்டக்குடி-விருத்தாசலம் சாலையில் இறையூர் பஸ் நிறுத்தம் அருகே மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பேச்சுவார்த்தை நடத்தினர். இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், பரந்தாமனின் உடலை புனேவில் பிரேத பரிசோதனை செய்தாலும், கடலூர் அல்லது திட்டக்குடி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் முன்னிலையில் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதுவரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கோஷமிட்டனர்.

இதையடுத்து போலீசார், அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் போலீசாருக்கும், பரந்தாமனின் உறவினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றி, அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!