ஃபேஸ்புக்கில் மனைவிக்கு ஆபாச மெசேஜ்’ – இளைஞரை அடித்து உதைத்த ஐஏஎஸ் அதிகாரி..!


தனது மனைவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய இளைஞரை ஐஏஎஸ் அதிகாரி அடித்து உதைத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் அலிபூர்துவார் மாவட்ட கலெக்டராக இருப்பவர், நிகில் நிர்மல்.

இவரது மனைவி நந்தினி கிருஷ்ணன். நந்தினிக்கு ஒரு இளைஞர் சமூக வலைதளத்தில் தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பிவந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, சமீபத்தில் அங்குள்ள உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விசாரணை நடத்திவந்த மேற்கு வங்க போலீஸார், பினோத் சர்கார் என்ற இளைஞரை நேற்று முன்தினம் கைதுசெய்தனர். இந்தத் தகவல் ஐஏஎஸ் அதிகாரி நிகிலுக்கு தெரிவிக்கப்பட்டது.

உடனே, தனது மனைவியுடன் இளைஞர் அடைத்து வைக்கப்பட்டிருந்த காவல் நிலையத்துக்கு வந்தார் நிர்மல். அங்கு வந்ததும், அந்த இளைஞரை சரமாரியாகத் தாக்கினார். இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

அந்த வீடியோவில், நிகிலின் மனைவி நந்தினி காவலர்களிடம் `பிரம்பு இருக்கிறதா’ எனக் கேட்கிறார். இந்த வீடியோ வைரலாக, ஐஏஎஸ் அதிகாரி சர்ச்சைக்கு உள்ளானார். உடனடியாக அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். இதற்கிடையே, நடந்த சம்பவங்களைக் கூறி, `நிகில் உண்மையான ஹீரோ’ என்று புகழ்ந்து, அவரது மனைவி நந்தினி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!