வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவன் – அதிர வைத்த பின்னணி.!


சிவகாசி அருகே பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த 12-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்.விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திகணேஷ். இவரின் இரண்டாவது மகன் சதீஷ் (17). இவர் சிவகாசி-ஶ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை வழக்கம்போல வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்றுள்ளார். பின்னர் கீழே இருந்து மாடியில் உள்ள தன் வகுப்பறைக்கு நடந்து சென்ற அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதைக் கண்ட சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அந்த மாணவனை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மாணவர் இறந்திருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணத்தில் பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவனை சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மாணவன் இறந்ததை அரசு மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இதைக்கேட்டு மாணவனின் பெற்றோர் கதறி அழுதனர். ஆசிரியர்களும் கண்கலங்கினர். மாணவன் இறப்பு குறித்து சிவகாசி நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் இறந்த மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மூச்சுத்திணறல் காரணமாக மாணவன் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். பள்ளி வளாகத்திலேயே மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிவகாசி நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!