சீரடிபாபாவை முழுமனத்துடன் நேசிப்பவருக்கு எப்போதும் அருள் கிடைக்கும்..!


பாபாவின் நாமத்தை ஜெபிப்பது, பாபாவைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவது, பாபாவைப் பற்றி படிப்பது, பாபாவையே நினைப்பது போன்ற சில வழிகளில் எப்போதும் பாபாவையே இறுகப் பற்றிக்கொண்டால், மாயையின் தாக்குதல்களை எதிர்க்கும் மனோபலத்தை வளர்த்துக் கொள்வதற்கு பாபாவின் உதவி நமக்குக் கிடைகிறது.

நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும் எடுத்துக் கொள்கிறார். பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனைத் திருப்திப்படுத்துகிறார். பாபாவின் மீது உள்ள ஈடுபாடு அதிகரிக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு மாயத்தோற்றமான இவ்வுலக நடவடிக்கைகளில் ஈடுபாடு குறைகிறது. பாபா எப்போதுமே வாழ்கின்றார். ஏனெனில் பிறப்பு இறப்பு என்ற இருமையையும் கடந்தவர் அவர்.

எவனொருவன் ஒருமுறை முழுமனத்துடன் அவரை நேசிக்கிறானோ, அவன் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான். பாபாவின் சக்தி தெய்வீக சைதன்யம் அந்த திசையை நோக்கி ஈர்க்கப்படும்.


ஒரு பக்தனின் அனைத்து உடல் சார்ந்த, உயிர் சார்ந்த, மானசீக நோய் சம்பந்தமான, தொந்தரவுகள், கஷ்டங்கள் அனைத்து அதிர்வுகளும் ஸ்ரீ சாய் சரித்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது அவை ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யத்தை சென்றடைகின்றன.

அவை அங்கு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பாராயணம் செய்யும் பக்தரை ஸ்ரீ சாய்நாதரின் அருள் நிரம்பிய அலைகளாக திரும்ப வந்து சேருகின்றன. இது போன்ற சூழ்நிலைகளில் பக்தன் இவ்வுலக சுகங்களையும் பரலோக சுகங்களையும் பெறுவான்.

ஸ்ரீ சாய்பாபாவின் கிருபையைப் பெற நம்மிடம் உள்ள அஹங்காரம், ஆணவம் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும். எல்லாவிதமான பெருமைகளும் ஒழிய வேண்டும். பின்னர் தான் அவரது சக்தியை, இரக்கக்குணத்தை உண்மையான சுபாவத்தை நாம் அறிய இயலும்.-Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!