இலங்கையை சூறாவளி தாக்கும் ஆபத்து இல்லை…!


வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம், சிறிலங்காவை நெருங்கியுள்ள நிலையிலும், சூறாவளி தாக்கும் ஆபத்து ஏதும் இல்லை என்று சிறிலங்காவின் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் இதுகுறித்து நேற்று கருத்து வெளியிடுகையில்,

“வங்கக் கடலில் அந்தமான் தீவுகளுக்கு அருகே உருவாகியுள்ள காற்றழுத்தம், புயலாக உருவெடுத்து, சிறிலங்காவை நோக்கி நகர்வதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.

அந்த காற்றழுத்தம், சிறிலங்காவுக்குத் தென்கிழக்காக 950 கி.மீ தொலைவில் உள்ளது. இன்னும் 24 மணிநேரத்தில் அது வலுவடையும் வாய்ப்புகள் உள்ளன. எனினும் அதன் பாதை இன்னமும் தெளிவாக இல்லை.

அதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும். காற்றின் வேகம் அதிகரிப்பதால் மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

தற்போதைய நிலையில் சிறிலங்காவை சூறாவளியோ, ஆழிப்பேரலையோ தாக்கும் ஆபத்து இல்லை. எனினும், வானிலை எந்த நேரத்திலும் மாற்றமடைவதற்கு சாத்தியங்கள் உள்ளன.

நாங்கள் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். இப்போது நிச்சயமாக எந்த பதற்றமும் அடைய வேண்டியதில்லை.” என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, வடக்கு, கிழக்கு கடற்பகுதியில் 90 தொடக்கம் 100 கி. மீ வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும், கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்தி

இதற்கிடையே வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை 5.30 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம், தற்போது சிறிலங்காவில் இருந்து 800 கி.மீ தொலைவில் இருப்பதாகவும், இன்னும் 12 மணிநேரத்தில் அது வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளது.

அந்த சிறிலங்காவுக்கு வடமேற்காக நகர்வதாகவும், இதனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும், வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்களில் மழை பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. – Source: puthinappalakai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!