மூட நம்பிக்கையின் உச்சகட்டம்.. இறந்த தாயுடன் 18 நாள்கள் வாழ்ந்த வாலிபர்..!


கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கொல்கத்தா சி.ஐ.டி அலுவலகத்துக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பேசியவர், ‘கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் பகுதியில் வசிக்கும் மைத்ரேய பட்டாசார்யா என்பவர், இறந்த தன் தாயை 18 நாள்களாக வீட்டில் வைத்துள்ளார். தற்போது தாயின் உடலைப் புதைக்க என்னை உதவிக்கு அழைக்கிறார். அங்கு என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை. நீங்கள்தான் விசாரிக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் உள் நுழையும்போதே கடுமையான நாற்றம் வீசியுள்ளது. மிகவும் பழைமையாக வீடாகக் காட்சியளித்த அங்கு 77 வயதான ஒரு பெண் இறந்த நிலையில் இருந்துள்ளார். அவர் படுத்திருந்த கட்டில் பாதி தீப்பிடித்த நிலையில் இருந்துள்ளது. உடனடியாக அந்த வீட்டில் இருந்த மைத்ரேய பட்டாசார்யாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பிறகு, நடந்த விசாரணையில் பல மர்மமான தகவல்கள் வெளிவந்துள்ளன. 38 வயதான மைத்ரேய பட்டாசார்யா எம்.சி.ஏ வரை படித்துள்ளார். இவரின் தந்தை கோரசந்த் பட்டாசார்யா நரம்பியல் நிபுணராக இருந்தவர். இவர் கடந்த 2013-ம் ஆண்டு இறந்துவிட்டார். தாய் கிருஷ்ணா பட்டாசார்யா அதே பகுதியில் உள்ள ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்தக் குடும்பம் சில வருடங்களுக்கு முன்புதான் கிறிஸ்துவ மதத்துக்கு மாறியுள்ளது. இவர்கள் கடவுள் மீது அதீத நம்பிக்கையுள்ளவர்கள் எனக் கூறப்படுகிறது.

தந்தை இறந்த பிறகு தாயும் மகனும் மட்டுமே அந்த வீட்டில் வசித்துவந்துள்ளனர். தந்தையின் நினைவாகப் பாழடைந்த வீட்டை புதுப்பிக்காமல் அப்படியே பாதுகாத்து வந்துள்ளனர். 18 நாள்களுக்கு முன்பு தாய் கிருஷ்ணா உயிரிழந்துள்ளார். தாய் இறந்ததும் வீட்டில் உள்ள அனைத்து கதவுகள், ஜன்னல்களை மூடிவிட்டு இறந்த தாயுடன் இருந்துள்ளார் மைத்ரேய பட்டாசார்யா. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பீடன் பகுதியில் உள்ள தன் உறவினரை தொடர்புகொண்டு ‘இரண்டு வாரங்களுக்கு முன்னதாக தன் தாய் இறந்துவிட்டார். இன்னும் சில தினங்களில் அவரைப் புதைக்க வேண்டும். அதற்கு நீங்கள் எனக்கு உதவ வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மைத்ரேய பட்டாசார்யாவின் நண்பர் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசியுள்ள மைத்ரேய பட்டாசார்யா, “நானும் என் அம்மாவும் மட்டுமே இந்த வீட்டில் வசித்து வருகிறோம். வயது முதிர்வால் என் அம்மாவால் தரையில் படுத்துத் தூங்க முடியவில்லை. கட்டில் வாங்கும் அளவுக்கு எங்களுக்கு வசதியில்லை. அதனால் எங்கள் வீட்டில் இருந்த மர அலமாரியைக் கட்டில்போல் செய்து கொடுத்தேன். அதில்தான் என் அம்மா தினமும் படுத்து ஓய்வெடுப்பார். ஒரு நாள் காலை வீடு அழுக்காக இருந்ததால் அம்மா அதை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் வழுக்கி கீழே விழுந்துவிட்டார். அதனால் அவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவச் செலவுக்கு என்னிடம் பணம் இல்லை. வங்கியில் பணம் கேட்டிருந்தேன். அது கைக்கு வரச் சற்று காலதாமதம் ஆகும் எனக் கூறினார்கள். அடுத்த சில நாள்களில் கால் வலி தாங்காமல் என் அம்மா இறந்துவிட்டார்.

கட்டிலில் படுத்திருக்கும்போதே அவர் உயிர் பிரிந்துவிட்டது. அவர் இறந்தது எனக்கு நன்றாகத் தெரியும். உடனடியாக என் வீட்டில் உள்ள கதவுகளை மூடி அவர் உடலைப் பாதுகாத்துவந்தேன். ஒருவர் இறந்து 21 நாள்கள் கழித்து அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என என் அப்பா கூறுவார். அம்மாவுக்கும் அதில் அதிக நம்பிக்கையுண்டு. அந்த மங்களகரமான நேரத்துக்காகத்தான் காத்திருந்தேன். முதலில் இறந்த உடலுடன் இருப்பது சற்று கடினமாகத்தான் இருந்தது. பிறகு, எதுவும் தெரியவில்லை. முன்னதாக வீட்டின் கீழ் என் அம்மா வாழ்ந்த அறையைத் தோண்டிதான் அவரைப் புதைக்க வேண்டும் என முடிவெடுத்தேன். பிறகு முற்றத்தில் புதைக்கலாம் என என் முடிவை மாற்றிக்கொண்டேன். அதற்குள் என் நண்பர் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துவிட்டார்” எனப் பேசியுள்ளார்.

மைத்ரேய பட்டாசார்யாவின் வீட்டின் வெளியில் அவரின் தந்தை, தாய் ஆகியோரின் பிறப்புச் சான்றிதழ், படிப்புச் சான்றிதழ் போன்ற பல ஆவணங்களும் சுவரில் ஒட்டப்பட்டிருந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் கூறும்போது, “அந்த வீட்டில் இருப்பவர்கள் யாரும் எங்களுடன் பேசமாட்டார்கள். வெளியிலும் வரமாட்டார்கள். முன்னதாக அவர் தந்தை இறந்தபோதும் பல மர்மங்கள் நிலவியது. முதலில் அவரே தன்னை நெருப்பு வைத்துக் கொளுத்திக்கொண்டார் எனக் கூறப்பட்டது. பிறகு, அவர்களது வீட்டில் நடந்த ஒரு சடங்கின்போது அவரது உடை அருகில் இருந்த விளக்கு மீது பட்டு எரிந்ததாகக் கூறப்பட்டது” எனத் தெரிவித்துள்ளனர்.

மைத்ரேயின் வீட்டில் எரிந்த நிலையில் இருந்த கட்டில் அவரின் தந்தை இறந்தபோது ஏற்பட்ட தீவிபத்து எனவும் பட்டாசார்யா குடும்பத்தில் உள்ள அனைவரும் அதீத கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் என்றும் அதனால்தான் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் பல மர்மங்கள் நிறைந்த இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!