புத்தாண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு காதல் மலரும்.. கெட்டிமேளச் சத்தம் கேட்கும்..!


திருமணம் என்பது மனித வாழ்க்கையில் அவசியமானது. சிலருக்கு காதல் திருமணம் நடைபெறும், சிலருக்கு பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறும். திருமணம் நடைபெறுவதற்கும், குழந்தைபேறு கிடைப்பதற்கும் கிரகங்களின் பார்வை , சேர்க்கை சாதகமாக இருக்க வேண்டும். 2019ஆம் ஆண்டில் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு காதல் மலரும் திருமணம் நடைபெறும் என்று பார்க்கலாம்.

ஒருவருக்கு திருமணம் நடைபெற குருபலமும், குருபார்வையும் ஒருவர் ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் குரு பார்வை பட்டால் அந்த தோஷம் நீங்கும் எனவேதான் குரு பார்வை கோடி நன்மை என்கின்றனர். அதாவது ஒருவருக்கு திருமணத்தில் தடையோ தாமதமோ ஏற்படும் போது குரு பார்வை பட்டால் அந்த தடை நீங்கி திருமண யோகத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கிறது.

இந்த ஆண்டு குருபகவான் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை மீனம்,ரிஷபம்,கடகம் ராசிகளின் மீது விழுவதால் இந்த ராசிக்காரர்களுக்கு குரு பலன் கிடைக்கிறது. அது தவிர குருபகவான் சஞ்சாரத்தினால் காதல், திருமணம், குழந்தை யோகம் கிடைக்கிறது. புத்தாண்டில் கெட்டிமேளம் கொட்டப்போகும் ராசிக்காரர்களையும், குவா குவா எந்த ராசிக்காரர்கள் வீட்டில் ஒலிக்கும் என்றும் பார்க்கலாம்.


மேஷம்
செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு வீரத்தோடு விவேகமும் அதிகம் இருக்கும். குருபகவான் இந்த ஆண்டு சாதகமான நிலையில் சஞ்சரிக்கவில்லை. எட்டாம் இடத்தில் உள்ள குருபகவான் உங்களின் குடும்ப ஸ்தானத்தையும், சுக ஸ்தானத்தையும் பார்க்கிறார். விரைய ஸ்தானமான 12வது வீட்டின் மீதும் குருவின் பார்வைபடுகிறது. வரும் ஆண்டு பிப்ரவரி மாதம் நிகழ உள்ள ராகு கேது பெயர்ச்சி பலவித நன்மைகளையும், பணவரவையும் தர உள்ளது. எட்டாம் இடத்தில் இப்போது உள்ள குருபகவான் 2019ஆம் ஆண்டு இறுதியில் அக்டோபர் 28ஆம் தேதி தனுசு ராசியில் இடப்பெயர்ச்சி அடைகிறார். இது ஒன்பதாம் இடம் என்பதால் குருவின் பார்வை 5ஆம் பார்வையாக மேஷ ராசியின் மீது விழுகிறது. எனவே 2019 அக்டோபர் மாதத்திற்குப் பின்னர் குருபலன் வருவதால் திருமண யோகமும், குழந்தை பாக்கிய யோகமும் கிடைக்கிறது. தேய்பிறை அஷ்டமி திதியில் ஸ்ரீ காலபைரவருக்கு சிவப்பு நிற துணியில் மிளகு மூட்டை கட்டி தீபம் ஏற்றலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயரை தரிசனம் செய்யலாம் நன்மைகள் நடைபெறும்.


ரிஷபம்

காதல் நாயகன் சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே. 2018ஆம் ஆண்டில் அஷ்டமத்து சனி, ஆறாம் இடத்து குருவினால் பாதிக்கப்பட்டிருந்தீர்கள். 2019ஆம் ஆண்டு உங்களுக்கு நன்மைகள் நிறைந்த ஆண்டாக இருக்கப் போகிறது. குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது சம சப்தமாக விழுகிறது. குருவின் ஏழாவது பார்வை திருமண யோகத்தை கொடுக்கிறது. காதல் மலரும் காலம் இது. மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கும். உற்சாக நினைவுகளுடன் வலம் வருவீர்கள். நீண்ட காலம் தடைபட்டு வந்த திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்காமல் ஏங்கித்தவித்தவர்களுக்கு இந்த ஆண்டு வீட்டில் தொட்டில் ஆடும். சிலர் தங்களின் பெற்றோர்களுக்கு 60ஆம் கல்யாணம், பீமசாந்தி நடத்தி வைப்பீர்கள். இப்போது சனி எட்டில் இருப்பதால் சிலருக்கு அஷ்டம சனியின் பாதிப்பும் இருக்கிறது. 2019 அக்டோபர் மாதம் குரு பெயர்ச்சி அஷ்டம ஸ்தானத்திற்கு வருவதால் சிலருக்கு பாதிப்பு ஏற்படும். கடன் பிரச்சினைகளும், நஷ்டமும் ஏற்படம் என்பதால் திருமணத்தை வரும் அக்டோபர் மாதத்திற்குள் நடத்தி முடித்து விடுங்கள். குருவாயூரப்பன் கோவிலுக்கு சென்று குழந்தை கிருஷ்ணரை வணங்கி வாருங்கள் நன்மையே நடைபெறும்.


மிதுனம்

அறிவின் நாயகன் புதனை ராசி நாதனாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே… இந்த ஆண்டு குருவின் பார்வை ஆறாம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் உள்ளது. இந்த குருவின் பார்வை உங்கள் ராசிக்கு இரண்டாம் இடம், 12ஆம் இடம், 10ஆம் இடங்களின் மீது விழுகிறது. கடன்கள் அடைபடும். கண்டகச்சனியின் பார்வை சாதகமாக இல்லை என்றாலும் நிகழ இருக்கும் ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. அதோடு அக்டோபர் 28ஆம் தேதி நிகழவிருக்கும் குரு பெயர்ச்சி அதிக நன்மை தரக்கூடியதாக அமைகிறது. ஏழாம் இடத்தில் அமரப்போகும் குருவினால் காதல் மலரும், தடைபட்டு வந்த திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது. அஷ்டமி திதியில் காலபைரவருக்கு நெய் தீபம் ஏற்றி வரவும். சதுர்த்தி நாளில் ஸ்ரீ விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடலாம் நன்மைகள் நடைபெறும்.


கடகம்

சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே… 2018ஆம் ஆண்டு உங்களுக்கு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. சனிப்பெயர்ச்சி அமோகமாக இருந்தது. அடுத்து வந்த குருப்பெயர்ச்சி அற்புதமாக இருந்தது. 2019ஆம் ஆண்டு நிகழ இருக்கும் ராகு கேது பெயர்ச்சி அற்புத பலன்களை அளிக்கப் போகிறது. பணவரவு அமோகமாக இருக்கும். காதல் கனிந்து திருமணத்தில் முடியும் காலம் இதுவாகும். திருமணம் முடிந்தவர்களுக்கு இந்த ஆண்டு குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் அக்டோபர் மாதம் நிகழப்போகும் குருப்பெயர்ச்சி ஆறாம் இடத்திற்கு வர உள்ளதால் உங்களின் பிள்ளைகளுக்கு திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நடத்தி வைப்பீர்கள். பௌர்ணமி மற்றும் அமாவாசை திதிகளில் சிவ ஆலயம் சென்று அர்ச்சனை செய்வது நல்லது. செவ்வாய்கிழமை முருகன் ஆலயத்திற்கு சென்று பாலபிஷேகம் செய்யலாம்.


சிம்மம்

சூரியனை ஆட்சி நாதனாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே… 2018ஆம் ஆண்டு உங்களுக்கு சோதனையாக காலகட்டமாக இருந்தது. ஐந்தாம் இட சனிபகவான் பல சாதகமான பலன்களைக் கொடுத்தாலும் மூன்றாம் இடத்து குரு பல சிக்கல்களை ஏற்படுத்தினார். கடந்த அக்டோபர் மாதம் நிகழ்ந்த குரு பெயர்ச்சியும் சாதகமானதாக இல்லை. சுக ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குரு சில பிரச்சினைகளை ஏற்படுத்துவார். அதே நேரத்தில் குரு பகவான் தனது பார்வையால் உங்கள் ராசிக்கு 12, 10, 8ஆம் இடங்களை பார்வையிடுகிறார். சிலர் காதல் வசப்படலாம். 2019, அக்டோபர் 28ஆம் தேதி நிகழ உள்ள குருப்பெயர்ச்சி சாதகமான பலன்களை ஏற்படுத்தும். ஐந்தாம் இடத்து குரு அதிசய மாற்றங்களை ஏற்படுத்துவார். வரும் பிப்ரவரியில் நிகழ உள்ள ராகு கேது பெயர்ச்சி நன்மைகளை தர உள்ளதால் 2019ஆம் ஆண்டு உங்களுக்கு நன்மைகள் அதிகம் நிறைந்த ஆண்டாக உள்ளது. பரணி நட்சத்திர நாளில் கால பைரவரை மிளகு தீபம் ஏற்றி வழிபடலாம்.


கன்னி

புத்திசாலித்தனத்திற்கு அதிபதியான புதனை ராசிநாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. 2018ஆம் ஆண்டு அர்த்தாஷ்டம சனி ஒரு பக்கம் ஆட்டி படைக்க குருவின் சஞ்சாரமும் சாதகமாக இல்லை. கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் அதிகமாக இருக்கும். நிகழ இருக்கும் ராகு கேது பெயர்ச்சி சில சாதகமான பலன்களை ஏற்படுத்துவார். உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான மீனத்தை குருபார்வையிடுவதால் உங்களுக்கு காதல் கைகூடி வரும். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் கைகூடி வரும். சிலர் வீட்டில் தொட்டில் ஆடும் குவா குவா சத்தம் கேட்கும். அக்டோபர் மாதம் நிகழ உள்ள குருப்பெயர்ச்சி உங்களுக்கு சுமாரான பலன்களையே தரப்போகிறார் என்பதால் கடவுளை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. நல்ல தசாபுத்தி நடந்தால் உங்களுக்கு அதிகம் நன்மைகள் நடைபெறும். ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றவும். புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு செல்லவும்.


துலாம்

காதல் நாயகன் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே. இந்த ஆண்டு உங்களுக்கு பண வருமானத்திற்கு பஞ்சமில்லாமல் இருந்தது. காரணம் இரண்டாம் இடத்து குருபகவான் அருள்தான். அதே நேரத்தில் மூன்றாம் இடத்தில் அமர்ந்துள்ள சனிபகவான் சில ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்தி வருகிறார். பிறக்க உள்ள 2019ஆம் ஆண்டு உங்களுக்கு நல்ல பலன்கள் அதிகம் நடைபெற்றாலும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள குருப்பெயர்ச்சி அவ்வளவு சாதகமாக இல்லை. குரு மூன்றாம் இடத்திற்கு நகர்வதால் சகோதர சகோதரி வழியில் சில பிரச்சினைகளை ஏற்படுத்துவார். மாமன் மகள், அத்தை மகளை திருமணம் செய்ய நினைத்தவர்கள் இப்போதைக்கு அந்த பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டாம். அதே நேரத்தில் பண வரவு தாராளமாக இருக்கும். பிப்ரவரியில் நிகழ உள்ள ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு சில பாதகங்களையும், நிறைய சாதகங்களையும் தரப்போகிறார். பாதிப்புகள் குறைய சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்யலாம். பிரதோச நாளிலும், பௌர்ணமி தினத்திலும் சிவனுக்கு தேன் அபிஷேகம் செய்வது நல்லது.


விருச்சிகம்

செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட வீர பராக்கிரமம் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே… கடந்த சில ஆண்டுகளாகவே ஏழரை சனியின் பிடியில் சிக்கித்தவித்து வருகிறீர்கள். இப்போது பாத சனி வேறு பாடாய் படுத்தி எடுத்து வருகிறது. ஜென்ம குரு உங்கள் ராசியில் இருப்பதால் குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து செல்லும் என்றாலும் ஏழாம் இடத்தையும், ஐந்தாம் இடம், ஒன்பதால் இடத்தையும் குரு பார்வையிடுவதால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை செய்ய முயற்சி செய்யலாம் வெற்றிகள் கிடைக்கும். திருமணம் நடைபெற்றவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். 2019 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு நன்மைகளை தரப்போகிறார். 2 ஆம் இடத்தில் கேது அமர்வது சாதகமான அம்சம். பணவரவு அதிகமாகும் சனிபகவான் குடும்பஸ்தானத்தில் இருந்த போதிலும் அடுத்த ஆண்டு கூடவே கேது அமரப்போகிறார் அக்டோபர் குரு பெயர்ச்சி நிகழ்ந்து சனியோடு குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வது அதிக சாதகமான அம்சமாகும். மேலும் நன்மைகள் நடைபெற ராகு காலத்தில் சரபேஸ்வரரை வணங்குங்கள். பிரதோஷ காலத்தில் நந்தி பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள் சிவபுராணம் படியுங்கள் அதிக நன்மை நடைபெறும்.


தனுசு

குருபகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட நேர்மை குணம் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, 2018ஆம் ஆண்டு ஜென்ம சனியின் பாதிப்பில் சிக்கி இருந்தாலும் லாப ஸ்தானத்தில் இருந்த குருபகவான் உங்களுக்கு பல நன்மைகளை அளித்து வந்தார். இப்போது குருபகவான் விரைய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். சிலர் புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள். 2019 ஆம் பிப்ரவரியில் நிகழ உள்ள ராகு கேது பெயர்ச்சி நன்மைகளை ஏற்படுத்துவார். ஜென்ம கேது, களத்திர ஸ்தான கேது சாதனைகளை நிகழ்ந்த வைப்பார். அக்டோபர் மாதத்தில் குருபகவான் உங்கள் ராசியில் அமரப்போகிறார். உங்கள் ராசியில் இருந்து ஏழாம்பார்வையாக உங்களின் களத்திர ஸ்தானத்தை பார்வையிடுகிறார், திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சுப செய்திகளை கேட்க வைப்பார். மேலும் நன்மைகள் நடைபெற வியாழக்கிழமை, சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிமாலை அணிவித்து தரிசனம் செய்யவும்.


மகரம்

சனிபகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே… ஏழரை சனியின் பிடியில் சிக்கியுள்ளீர்கள். விரைய சனி என்றாலும் குருபகவான் உங்களை பாதுகாத்து வருகிறார். பணவரவு அமோகமாக இருக்கும். கடன்கள் வசூலாகும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். குருவின் பார்வை ராசிக்கு ஏழாம் வீட்டின் மீது விழுவதால் தடைபட்டிருந்த திருமணம் கைகூடி வரும். இதுநாள் வரை சிங்கிள் என்று ஸ்டேட்டஸ் போட்டவர்கள் இனி தைரியமாக உங்கள் ஜோடியுடன் ஹனிமூன் கிளம்பலாம். 2019ஆம் ஆண்டு நிகழ உள்ள ராகு கேது பெயர்ச்சி சில நன்மைகளை ஏற்படுத்தும். குருபகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு அக்டோபர் மாதம் வர உள்ளது சாதகமற்ற அம்சம் என்றாலும் உங்களின் விரைய செலவுகளை சுப செலவுகளாக மாற்றுங்கள். பாதிப்புகள் குறைய ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து அர்ச்சனை செய்யவும்.


கும்பம்

சனிபகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே… 2018ஆம் ஆண்டு உங்களுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஆண்டாக கடந்துள்ளது. சனிபகவான் உங்களுக்கு சாதகமான பலன்களைக் கொடுத்து வந்தார். அதேபோல குருபகவானும் உங்களுக்கு நன்மைகளை அளித்து வருகிறார். 2019ஆம் ஆண்டு நிகழவிருக்கும் ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு பல நன்மைகளை அளிக்கப் போகிறது. லாப ஸ்தான கேது பூர்வ புண்ணிய ஸ்தான ராகு உங்களுக்கு நன்மைகளை அளிக்கப் போகிறார். அக்டோபர் மாதம் குருபகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் அமரப்போகிறார். உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீட்டினை பார்க்கப்போகிறார். இந்த நேரத்தில் காதல் மலரும், திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமண பேச்சுவார்த்தையை தொடங்கலாம்.

மேலும் நன்மைகள் நடைபெற ராகு காலத்தில் துர்காதேவியை வணங்கவும். தேய்பிறை அஷ்டமியில் காலபைரவரை வணங்க நன்மைகள் நடைபெறும்.


மீனம்

குருபகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே… 2018ஆம் ஆண்டு உங்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பதாம் இடத்து குரு, பத்தாம் இடத்து சனி என இருந்தாலும் பல நல்ல விசயங்களை பார்த்து இருப்பீர்கள். இதற்குக் காரணம் உங்களின் தசாபுத்தியும், கடவுள் பக்தியும்தான். குருபகவான் உங்கள் ராசியை பார்வையிடுவதால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வரவிருக்கும் புத்தாண்டிலும் உங்களுக்கு நன்மைகளே அதிகம் நடைபெறப்போகிறது. பிப்ரவரியில் நிகழ உள்ள ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு பல சாதகமான அம்சங்களை தரப்போகிறது. அதே நேரத்தில் அக்டோபரில் நிகழ உள்ள குருப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் அமர்வது சில பாதகமான அம்சங்களை ஏற்படுத்தும். மேலும் நன்மைகள் நடைபெற வியாழக்கிழமைகளில் ராகவேந்திரரை வணங்கவும்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!